கிளிநொச்சி பூநகரி கௌதாரிமுனை பிரதான வீதியின் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்ட மணல் திட்டு அகற்றப்பட்டுள்ளதுடன் போக்குவரத்துக்கு மேலும் ஒரு பேருந்து சேவை ஏற்படுத்தப்பட்டுள்ளது
கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கௌதாரிமுனை மன்னித்தலை மற்றும் கல்முனை போன்ற பகுதிகளுக்கான பிரதான வீதியாக காணப்படும் கௌதாரிமுனை கல்முனை வீதி நீண்டகாலமாக புனரமைக்கப் படாத நிலையில் காணப்படுவதுடன் மன்னி தலைப்பகுதியில் இயற்கையாகவே படியும் மணல் திட்டு ஒன்று 6 அடி உயரத்திற்கு மேலாக வீதியை மூடி மணல் படர்ந்து காணப்பட்டது
இதனால் கடந்த ஆறு மாதங்களாக போக்குவரத்தில் பல்வேறு இடர்பாடுகள் காணப்பட்டதுடன் இப் பகுதிக்கான ஒரே ஒரு பேருந்து சேவையும் மன்னித்தலையுடன் நிறுத்தப்பட்டிருந்தது இந்த நிலையில் கல்முனை மன்னித்தலை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 39க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மற்றும் கடற் றொழிலாளர்கள் போக்கு வரத்தில் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வந்தனர்.
இதனை அகற்றி போக்குவரத்துக்கு ஏற்ற வழிவகைகளை செய்து தருமாறு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக தற்போது குறித்த மணல் திட்டு போக்குவரத்துக்கு ஏற்ற வகையிலே அகற்றப்பட்டுள்ளது.
அதே நேரம் இப் பகுதிக்கு ஒரு பேருந்து சேவை மாத்திரமே மேற்கொள்ளப்பட்டு வந்தது கடந்த 3 நாட்களாக மேலும் பகல் வேளை ஒரு பேருந்து சேவையும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




