இந்த புகைப்படங்கள் நேற்று (5) கிளிநொச்சி நகரில்-ஏ9 வீதியில்- எடுக்கப்பட்டவை.
அதாவது, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்த்தனவினால் வெளியிடப்பட்ட புதிய சுகாதார வழிகாட்டல் குறிப்புக்கள் அமுலாகிய தினமான நேற்று எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.
புதிய சுகாதார அறிவுறுத்தல்களின்படி, 15 பேருடன் மாத்திரமே மரணச்சடங்குகள் மேற்கொள்ள முடியும். இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல் குறிப்பிலும் இதேநடைமுறையே அமுலாகியது. அப்போது, விதிமுறையை மீறி இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் என பலர் தனிமைப்படுத்தப்பட்ட சம்பவங்கள் வடமாகாணத்திலேயே இடம்பெற்றிருந்தது.
கடந்த 3ஆம் திகதி கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற விபத்தில் சந்திரசேனன் கிரிதரன் (25) என்ற இளைஞன் உயிரிழந்தார். அவர் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றுபவர்.
அவரது இறுதி ஊர்வலத்தில் நேற்று சுகாதார விதிமுறைகளை மீறி பெருமளவான ஆடைத்தொழிற்சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர். எனினும், சுகாதாரத்துறையினர் அதை கண்டுகொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
ஏற்கனவே, கிளிநொச்சியில் ஆடைத் தொழிற்சாலைகளின் மூலம் கொரோனா பரவல் ஏற்பட்டு, ஒரு கிராமத்தையே முடக்க வேண்டிய நிலைமையேற்பட்டது. எனினும், சுகாதாரத்துறையினர் ஆடைததொழிற்சாலைகளை மூட மறுப்பதாக அப்போது சர்ச்சை தோன்றியது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவதுடன், சாதாரண குடிமகன் ஒருவரின் மரண ஊர்வலம் இதேவிதமாக நடந்தாலும் கண்டுகொள்ளாமல் விடுவீர்களா என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேள்வியெழுப்பி வருகின்றனர்.




