கனடாவின் மேலுமொரு சுதேச வதிவிடப் பாடசாலையில் புதைகக்கப்பட்ட 182 மாணவர்களின் எச்சங்கள் அடையாளம் காணப்பட்டனர். அண்மை நாட்களில் சுதேசியர்களின் வதிவிடப் பாடசாலைகளாக இயங்கிய இடங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள மூன்றாவது மனிதப் புதைகுழி இதுவாகும்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் கிரான்ப்ரூக்கிற்கு அருகிலுள்ள முன்னாள் சென்ட் யூஜின் மிஷன் பாடசாலை அமைந்திருந்த இடத்திலேயே மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. தரையை ஊடுருவும் ரடார் மப்பிங் முறையில் நடத்தப்பட்ட சோதனையில், 7 முதல் 15 வயது வரையிலான மாணவர்களின் எச்சங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
முன்னதாக, மே மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள முன்னாள் கம்லூப்ஸ் இந்தியன் வதிவிடப் பாடசாலையில் 215 குழந்தைகளின் எச்சங்களும், கடந்த வாரம் சஸ்காட்செவனில் உள்ள மேரிவாலில் உள்ள மற்றொரு வதிவிட பாடசாலையில் 751 எச்சங்களும் கண்டறியப்பட்டன.
1912 முதல் 1970 களின் முற்பகுதி வரை மத்திய அரசாங்கத்தின் சார்பாக கத்தோலிக்க திருச்சபை நடத்திய இந்திய வதிவிடப் பாடசாலைகளில் இந்த மரணங்கள் நிகழ்ந்தன.
இப்போது கண்டறியப்பட்டுள்ள புதைகுழிகள் சில மூன்று முதல் நான்கு அடி ஆழம் வரை ஆழமானவை என்பது தெரிய வந்துள்ளது.
கனடாவின் பூர்வகுடிகள் இந்த வதிவிட பாடசாலைகளில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டனர், அங்கு மாணவர்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் மொழியிலிருந்து அந்நியப்படுத்தப்பட்டு, தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களால் உடல் ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டனர்.
கனடா “கலாச்சார இனப்படுகொலை” செய்ததாக முடிவு செய்த விசாரணை ஆணையத்தின் விசாரணை முடிவின்படி, 4,000 க்கும் அதிகமானோர் பாடசாலைகளில் நோய் மற்றும் கொடுமைகளால் இறந்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை, பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ உள்நாட்டு ஒருங்கிணைப்பின் “தீங்கு விளைவிக்கும் அரசாங்கக் கொள்கைக்கு” மன்னிப்பு கேட்டார்.




