தற்போது மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மருதமுனை பிரதேசத்தை நாளை (1) முதல் முழுமையாக முடக்க இன்று (30) பகல் நடைபெற்ற உயர்மட்டக்.கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப் தலைமையில் மாநகர முதல்வர் அலுவலகத்தில் நடைபெற்ற உயர் மட்டக்கூட்டத்தில் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நாளை இரவு முதல் மருதமுனை பிரதேசத்திற்கு வெளியில் இருந்து பொதுமக்கள் உட்பிரவேசிப்பதும், மருதமுனையில் இருந்து வெளியேறுவதும் முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் முழுமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மருதமுனை பிரதேசத்தில் இருந்து கொரோனாவினை முழுமையாக இல்லாதொழிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்குமாறு கோட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ் உயர்மட்டக் கலந்துரையாடலில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி, கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப் ரஹ்மான், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.ஆர்.எம் அஸ்மி, கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.அமீர், எம்.எஸ்.உமர் அலி, பீ.எம்.சிபான், கல்முனை மாநகர சபை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் அர்சத் காரியப்பர், வைத்தியர்கள், மருதமுனை வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், மருதமுனை உலமா சபை பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.