நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்ததை அடுத்து, ஸ்வீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃபன் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
ஸ்வீடன் நாட்டில் புதிதாக கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான வாடகை கட்டுப்பாடுகளை எளிதாக்க அரசு திட்டமிட்டது. இதற்கு இடதுசாரி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்து, அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றது. அத்துடன், பிரதமர் ஸ்டீபன் லோஃபன் மீது பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது.பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 349 உறுப்பினர்களில், 181 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதனால் தீர்மானம் வெற்றி பெற்றது. இதையடுத்து பிரதமர் ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்து ஒரு வாரமான நிலையில்,பிரதமர் ஸ்டீபன் லோஃபன், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய தலைமையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை சபாநாயகரிடம் அவர் ஒப்படைத்துள்ளார். பிரதமர் லோஃபன் பதவி விலகினாலும், புதிய அரசு அமையும் வரை, அவர் தலைமையிலான நிர்வாகம் வழக்கமான பணிகளை மேற்கொள்ளும்.இது குறித்து, ஸ்டீபன் லோஃபன் கூறுகையில், “கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் தேர்தல் நடத்துவது நாட்டுக்கு சரியாக இருக்காது,” என்று தெரிவித்தார். ஸ்வீடனில் ஓராண்டில் அடுத்த பொதுத் தேர்தல் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.