நாயை குரைக்காமல் இருக்க சொல்லுங்கள் என இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.
நாடாளுமன்றத்தில் இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும், பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருக்குமிடையில் இன்று நாடாளுமன்றத்தில் தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது, “அந்த நாயை குரைக்காமல் இருக்க சொல்லுங்கள். அதை வெளியில் அனுப்புங்கள்“ என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய எம்.ஏ.சுமந்திரன், “அரசியல் கைதிகளை விடுவிக்க கோரி அரச தரப்பின் அமைச்சர் ஒருவரே கெஞ்சிக் கேட்கிறார். ஒருவரால் முடியாத விடயத்தையே இப்படி கேட்பார்கள். அரசியல் கைதிகள் விடயத்தை பிச்சைக்காரன் புண் போல நாம் கிளறிக் கொண்டிருப்பதாக அரச தரப்பில் இருந்து ஒருவர் சொல்கிறார். நாங்கள் 11 வருடங்களாக இதை தினமும் பேசி வருகிறோம். நாம் எதிர்க்கட்சியிலிருந்து அதை செய்கிறோம். அரசாங்கம் இதில் அரசியல் செய்யாமல், உண்மையில் கைதிகளை விடுவிக்க வேண்டுமெனில் நாளையே விடுவிக்கலாம். நாளை பூரணை தினம். நாளையே விடுவியுங்கள். இதை பேசிக் கொண்டிருந்து அரசியல் செய்யாதீர்கள்.
அவர்கள் அரசியல் கைதிகள்தான். அவர்களை ஏன் அரசியல் கைதிகள் என்பதை பலமுறை தெளிவுபடுத்தி விட்டோம். நேற்று நாமல் ராஜபக்ச உரையாற்றிய போது, பின்னாலிருந்த சுரேன் ராகவன், இந்த விடயத்தில் தனக்கும் பங்கிருப்பதாக சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தார்.
அரச தரப்பிலிருந்த அவர் அரசியல் கைதிகள் என்கிறார்கள். மற்றவர்கள் இல்லையென்கிறார்கள். நான் சுரேன் ராகவனிற்கும் சவால் விடுகிறேன், அவரால் எத்தனை அரசியல் கைதிகளை விடுவிக்க முடியுமென பார்க்கலாம் என்றார்.
இதன்போது எழுந்த பெரமுன எம்.பி, சுரேன் ராகவன், கடந்த 11 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருக்கிறீர்கள். அரசியல் கைதிகள் விடயத்தில் என்ன செய்தீர்கள் என கேள்வியெழுப்பினார்.
பதிலளித்த சுமந்திரன், நான் 11 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அரசியல் கைதிகள் பற்றி பேசுகிறோம். நீங்கள் அறிந்திருக்கவில்லை போல. நீங்கள் அரச தரப்பில் உள்ளவர். பதவிகளிற்காக இப்படி பேசிக்கொண்டிருப்பீர்கள்“ என்றார்.
கடந்த அரசாங்கத்துடன் இருந்து என்ன செய்தீர்கள் என சுரேன் ராகவன் கேள்வியெழுப்பினார்.
இதன்போது, நூற்றிற்கும் மேற்பட்ட கைதிகளை விடுவித்ததாகவும், அதனால் தாம் திருப்தியடையவில்லை, முழுமையாக அரசியல் கைதிகள் விடுவிக்க வேண்டுமென்பதே தமது நிலைப்பாடு என்றார்.
இருவருக்குமிடையில் சர்ச்சை தோன்ற, நாயை குரைக்காமல் இருக்க சொல்லுங்கள், வெளியில் அனுப்புங்கள் என சுமந்திரன் தெரிவித்தார்.




