எனக்கும் சிம்புவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு என நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா தெரிவித்துள்ளார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடித்துள்ளார். நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவர் இந்தப் படத்தில் வில்லனாக நடித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் இயக்குனராக வெற்றி கண்ட எஸ்ஜே சூர்யா, நடிகராகவும் தற்போது முன்னேறி வருகிறார். எஸ்ஜே சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான மான்ஸ்டர் திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதையடுத்து தற்போது மாநாடு படத்தில் நடித்துள்ளார்.
நேற்று ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் மாநாடு படக்குழுவினர் உரையாடினர். அதில் யுவன், சிம்பு, வெங்கட் பிரபு, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்ஜே சூர்யா, மதன் கார்க்கி, சுரேஷ் காமாட்சி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய எஸ்.ஜே.சூர்யா “எனக்கும் சிம்புவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு.. ஒன்னு ரெண்டு பேருமே உச்சத்துல இருப்போம்.. இல்லேன்னா ரெண்டுபேருமே சிக்கல்ல இருப்போம்.. சிம்பு பான் இந்தியா படம் பண்ணனும்.. அதுக்கு மாநாடு ஒரு ஆரம்பமா இருக்கும்.. கொரோனா தொற்றால பாதிக்கப்பட்ட சமயத்துல கூட படத்தோட கேமராமேன் வந்து வேலை பார்த்தாரு. அதைவிட ஆச்சர்யம் அவரை சிம்பு கட்டிப்புடிச்சு பாராட்டுனாரு.. கல்யாணி பிரியதர்ஷனை பார்க்கிறப்ப எல்லாம் எனக்கு மாடர்ன் ரேவதி தான் ஞாபகத்துக்கு வருவாங்க… வெங்கட்பிரபு கிளாசா படம் எடுக்கிறவரு.. அவருகிட்ட நம்ம கரகாட்டக்காரன் ஆடியன்ஸையும் சந்தோஷப்படுத்தணும் மறந்துறாதீங்கன்னு சொன்னேன்” என்று தெரிவித்தார்.