அமைச்சர் ச.வியாழேந்திரனின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கிச் சூட்டினால் ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உறவினர்கள், கிராமத்தவர்கள் மட்டக்களப்பு- திருகோணமலை பிரதான வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், சுமார் 15 நிமிடங்கள் அளவில் வீதிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் விசேட அதிரடிப்படையினரும், பொலிசாரும் தலையிட்டு ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றினர்.
மட்டக்களப்பு, பிள்ளையாரடியிலுள்ள இராஜாங்க அமைச்சர் ச.வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக இன்று மாலை 5.10 மணியளவில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது.
மகாலிங்கம் பாலசுந்தரம் (34) என்ற டிப்பர் சாரதி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரும், அவருடன் முச்சக்கர வண்டியில் வந்தவரும் மதுபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவர்கள் இராஜாங்க அமைச்சரின் வீட்டின் முன்பாக கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தருடன் முரண்பட்டு, மோதலில் ஈடுபட்ட பின்னர் துப்பாக்கிச்சூடு நடந்தது.





