தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகேயுள்ள வாணியாறு அணை பகுதியில் இலங்கை அகதிகள் உள்ளது. இம்முகாமில் 250 க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த முகாமில் வசித்து வந்த 16 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த குமார் என்ற இளைஞர் ஒருவர் காதலித்து வந்துள்ளார். காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததால், கடந்த 13ஆம் திகதி சிறுமி பூச்சிக்கொல்லி மருந்து குடித்துள்ளார்.
தகவலறிந்த சிறுமியின் உறவினர்கள் அவரை மீட்டு உடனே தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சிறுமியை முள்ளிக்காடு பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் குமார் என்பவர் காதலித்ததாகவும், காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரிந்ததால், அந்த இளைஞரும் சிறுமியும் தற்கொலை செய்யும் முடிவினை எடுத்துள்ளதும் விசாரணையில் தெரிய வந்தது.
இதற்கு அவரது காதலன் குமார் பூச்சிக்கொல்லி மருந்தினை வாங்கி வந்து, சிறுமியை மட்டும் குடிக்க வைத்துவிட்டு குமார் மருந்தினை குடிக்காமல் ஏமாற்றியதும் இதில் சிறுமி மட்டும் உயிரிழந்ததும் தெரியவந்தது.
எனவே சிறுமியை ஏமாற்றிய வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சிறுமியின் பெற்றோர் பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். ஆனால் அங்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த இலங்கை தமிழர்கள் அந்த இளைஞரை கைது செய்ய கோரி சிறுமியின் சடலத்தை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்து, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் மறியலில் ஈடுபட்ட இலங்கை தமிழர்களிடம் சிறுமி இறப்புக்கு காரணமான இளைஞரை கைது செய்வதாக உறுதி அளித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.