நாளெல்லாம் வேலை செய்வதாலும், வேறு சில காரணங்களாலு அவ்வப்போது தலைவலி ஏற்படுவது சகஜம் தான். அதற்கு உடனே மாத்திரையைத் தேடக்கூடாது. ஏனென்றால் அம்மாத்திரையால் பக்க விளைவுகள் ஏற்படும் வாய்ப்புகள் உண்டு. அதற்கு பதிலாக தலைவலி குறைய சில வீட்டுவைத்திய முறைகளையும் நீங்கள் முயற்சிக்கலாம். இதனால் பக்க விளைவுகள் எதுவும் இருக்காது. சரி அப்படி என்ன தீர்வு உள்ளது என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்.
உடலில் நீர்ச்சத்து குறைவதாலும் தலைவலி ஏற்படக்கூடும் என்று ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. எனவே தலைவலி ஏற்படும் போது ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தால் தலைவலி குறையும். தொடர்ந்து தலைவலி ஏற்படாமல் இருக்க அவ்வப்போது போதுமான தண்ணீர் குடிப்பதும் நல்ல உணவுகளை எடுத்துக்கொள்வதும் மிகவும் நல்லது.
இஞ்சி ஒரு இயற்கையான வலி நிவாரணி என்பதால், ஒற்றைத் தலைவலி பிரச்சினை இருப்பவர்கள் இஞ்சி குடித்தால் தலைவலி குறைந்து நீங்கள் புத்துணர்ச்சியுடன் உணர்வீர்கள்.
அளவோடு காஃபின் உள்ள காபி குடித்தால் தலைவலி குறையும். அதே போல அதிகளவு காஃபின் பானங்கள் அல்லது உணவுகளை எடுத்துக்கொண்டால் உடலில் நீரிழப்பு ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
தூக்கமின்மையாலும் தலைவலி ஏற்படக்கூடும். இதனால் தலைவலி ஏற்படுவது மட்டுமல்லாமல், உடல் சோர்வடைந்துவிடும். தூக்கமின்மையால் தலைவலி ஏற்பட்டால், கண்களுக்கு சிறிது ஓய்வு கொடுத்து கொஞ்ச நேரம் தூங்கினாலே போதும். தலைவலியும் இருக்காது மூளையும் நன்றாக செயல்படும்.
மன அழுத்தம் காரணமாகவும் தலைவலி ஏற்படக்கூடும். மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகள் அல்லது செயல்பாடுகளைப் பயிற்சி செய்வது தலைவலியின் தீவிரத்தை குறைக்க உதவும். யோகா, சுவாச உடற்பயிற்சி அல்லது தியானம் செய்து நீங்கள் ஓய்வெடுத்தால் தலைவலி குணமடையும்.




