தன்னைப் பொலிஸ் உத்தியோகத்தராகக் காண்பித்த, ஊரில் படம் காட்டிக் கொண்டு திரிந்த இளைஞன் ஒருவரைக் யாழ்.கோப்பாய் போக்குவரத்துப் பொலிஸார் நேற்று (14) கைதுசெய்தனர்.
அச்செழு பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தனது மோட்டார் சைக்கிளில் பொலிஸாரின் சின்னம் ஒட்டியிருந்ததுடன் தனது தொலைபேசியில் பொலிஸார் அணியும் ரீசேட் அணிந்து எடுத்த போட்டோவையும் வைத்திருந்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை கோப்பாய் பொலிசார் வீதி ரோந்தில் ஈடுபட்ட போது, பொலிஸ் என குறிப்பிட்ட ஸ்டிக்கர் ஒட்டிய மோட்டார் சைக்கிளில் சுள்ளான் ஒருவர் வந்துள்ளார். அவரின் உருவத்திற்கும், காட்டிய படத்திற்கும் தொடர்பிருக்கவில்லை. அவரது தோற்றத்திற்கும், பொலிஸ் அடையாளத்திற்கும் தொடர்பிருக்காததால் சந்தேகமடைந்த பொலிசார், அவரை வழிமறித்து விசாரணை செய்தனர்.
பொலிஸ் விசாரணையில் சுள்ளான் பொலிஸ் திருதிருவென விழிக்க தொடங்கியுள்ளார்.
அவரது தொலைபேசியை வாங்கிய பொலிசார், ஆய்வு செய்தனர்.
அதில் பொலிசார் அணியும் (பொலிஸ் என பொறிக்கப்பட்ட நீல நிறமான) ரீசேர்ட் அணிந்து புகைப்படம் எடுத்திருந்தார்.
உடனடியாக அவரை கோப்பாய் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று தடுத்து வைத்து விசாரணை நடத்தினர்.
அவர் தெரிவித்த தகவல்களின்படி-
நண்பர் ஒருவர் பொலிஸ் உத்தியோகத்தராக கடமையாற்றுகிறார். அவர் பாவித்த மோட்டார் சைக்கிளை நமது சுள்ளான் பொலிஸ் விலைக்கு வாங்கியிருக்கிறார். பொலிஸ் உத்தியோகத்தர் தனது பாவனையில் மோட்டார் சைக்கிள் இருந்தபோது, பொலிஸ் என குறிப்பிடப்பட்ட ஸ்டிக்கரை ஒட்டியிருந்தார்.
அதே பொலிஸ் உத்தியோகத்தரிடமிருந்து பொலிஸ் என பொறிக்கப்பட்ட நீல நிற ரீசேர்ட் ஒன்றையும் பெற்றுள்ளார்.
கைதான இளைஞன் திருநெல்வேலி பகுதியில் புடவைக்கடை ஒன்றில் பணிபுரிகிறார்.
எனினும், தான் சிவில் உடையில் கடமையிலுள்ள பொலிஸ் உத்தியோகத்தர் என உள்ளூரில் சீன் போட்டுள்ளார். பொலிஸ் அடையாளங்களை பயன்படுத்தி அவர் குற்றச்செயல்களில் ஈடுபடவில்லையென பொலிசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
படம் காட்ட பொலிஸ் வேடமிட்ட இளைஞன் இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.




