மாகாண நிர்வாகங்களிற்குட்பட்ட 9 வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதென எடுக்கப்பட்ட அமைச்சரவை முடிவு, அதிகார பரவலாக்களை கேலிக்கூத்தாக்கும் ஒரு செயல் என்பதை சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான த.சித்தார்த்தன்.
மாகாண நிர்வாகத்திற்குட்பட்ட 9 வைத்தியசாலைகளை பறித்தெடுக்க அரசு மேற்கொண்டுள்ள தீர்மானத்தை கண்டித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மாகாண நிர்வாகங்களிற்குட்பட்ட 9 வைத்தியசாலைகளை மத்திய சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கான அமைச்சரவை முடிவு நேற்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி, வடமாகாணத்திலிருந்து 4 வைத்தியசாலைகள் மத்திய சுகாதார அமைச்சினால் பொறுப்பேற்கப்படவுள்ளது.
மாகாணங்களின் அதிகாரங்களை சிறிது சிறிதாக பறித்தெடுக்கும் அரசின் அரசின் இரகசிய நோக்கத்தை இந்த நடவடிக்கை தெளிவாக வெளிக்காட்டுகிறது. முக்கியமாக வடக்கு கிழக்கிலுள்ள நிறுவனங்களை கையக்கப்படுத்தி, இந்த மாகாணசபைகளை அதிகாரமற்ற அமைப்புக்களாக மாற்றுவதுடன், மாகாணசபைகளையும் செயலிழக்க செய்யும் நோக்கமிருக்கிறது.
இதேபோல, தேசிய பாடசாலைகளை உருவாக்கி மாகாண கல்வியமைச்சை செயலிழகக செய்து, கையகப்படுத்த அரசு முயற்சித்து வருகிறது.
அரசின் இந்த நடவடிக்கைகள் அதிகார பரவலாக்களை கேலிக்கூத்தாக்குவதுடன், இனப்பிரச்சனை தீர்விற்கு தாம் தயாரில்லையென்ற செய்தியையே வெளிப்படுத்துகிறார்கள்.
இதனை நாம் வன்மையாக கண்டிக்கிறோம் என தெரிவித்துள்ளார்.




