இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றது. வரும் ஜுன் 18ம் முதல் 22 வரை நடக்கும் இந்தப் போட்டியில் நியூசிலாந்தை எதிர்த்து விளையாட இருக்கிறது. இந்தப் போட்டிக்கு ஆயத்தமாகும் விதமாக, அந்த அணி இங்கிலாந்துடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது.
அதேவேளையில், இந்திய அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இங்கிலாந்தில் நிலவும் சீதோஷ்ண நிலை நியூசிலாந்துக்கு சற்று கூடுதல் சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஆனால், இந்தியாவும் கடும் நெருக்கடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் விளையாடும் இந்திய அணிக்கான வீரர்களின் தேர்வு குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அதில், இந்திய அணி 5 வீரர்களுடன் களமிறங்க வேண்டும் என்றும், 4-வது மற்றும் 5-வது நாளில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் திறமையை வெளிப்பத்தக் கூடும் என்பதே இந்த விருப்பத்திற்கான காரணம் எனவும் கூறினார்.
ஆல் ரவுண்டர்களான அஸ்வின், ஜடேஜா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கைகொடுப்பார்கள். இவர்கள் இருக்கும் போது, 6-வது பேட்ஸ்மேன் தேவையில்லை. இந்திய வீரர்களுக்கு டிம் சவுதி, டிரெண்ட் போல்ட் இணை கடும் சவால் கொடுப்பார்கள். இருவராலும் இரண்டு பக்கமும் பந்தை ஸ்விங் செய்ய முடியும். ரோகித் சர்மா- டிரென்ட் போல்ட் இடையிலான போட்டியை எதிர்நோக்குகிறேன். ரோகித் சர்மா செட்டாகி விட்டால், போல்டின் நிலை அவ்வளவு தான், என்றார்.