சோசலிசத்திற்கும், மம்தா பானர்ஜிக்கும் திருமணம் நடைபெறவுள்ளது. இவர்களின் திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகியுள்ளது.
தீவிர இடதுசாரியான (கம்யூனிஸ்ட்) மோகன், தனது மூன்று மகன்களுக்கு அவர் நம்பும் சித்தாந்தங்களின் பெயரை சூட்டியுள்ளார். ஆனால் சோசலிசம் ஒரு நாள் மம்தா பானர்ஜியை திருமணம் செய்து கொள்வார் என்று அவர் கணித்திருக்க முடியாது.
கம்யூனிஸ்டுகளும் மம்தா பானர்ஜியும் மேற்கு வங்கத்தில் எதிர்எதிர் முகாமில் முட்டி மோதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில், அவர்கள் இருவரும் திருமணம் செய்யவுள்ளனர்.
மணமகனின் பெயர் சோசலிசம். மணமகள் மம்தா பானர்ஜியை ஜூன் 13 அன்று திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
சோசலிசத்தின் சகோதரர்களின் பெயர் கம்யூனிசம் மற்றும் லெனினிசம் ஆகும். அவர்களின் குடும்பத்தில் மார்க்சியம் என்ற பேரனும் உள்ளார்.
மோகன் (52) மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார். தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஐ) சேலம் மாவட்ட செயலாளராக உள்ளார். முன்னதாக 2016 சட்டமன்றத் தேர்தலில் வீரபாண்டி தொகுதியில் மக்கள் நலக் கூட்டணி சார்பில் போட்டியிட்டார். தான் ஆதரிக்கும் சித்தாந்தங்களை தனது மகன்களிற்கு சூட்டினார். கம்யூனிசம், லெனினிசம் மற்றும் சோசலிசம் என்பது 3 பிள்ளைகளின் பெயர்.
தனக்கு 18 வயதிலிருந்தே அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக மோகன் ஊடகங்களுக்கு தெரிவித்தார். அவர் தனது தந்தை மற்றும் தாத்தாவுடன் சிபிஐ-யில் பணியாற்றினார் மற்றும் போராட்டங்களை ஏற்பாடு செய்தார், இறுதியில் கட்சியின் ஒரு முழுநேர உறுப்பினரானார்.
“சோவியத் யூனியன் பல நாடுகளாகப் பிரிக்கப்பட்ட பின்னர் கம்யூனிசம் இறந்துவிட்டதாக மக்கள் கூறியபோது நான் மிகவும் கலக்கமடைந்தேன். அந்த நேரத்தில், நான் திருமணமாகாதவனாக இருந்தபோதிலும், இந்த சித்தாந்தங்கள் மீதான என் அபிமானத்தை பிரதிபலிக்கும் வகையில் என் குழந்தைகளுக்கு பெயரிட முடிவு செய்தேன்’’ என்றார் மோகன்.
”எனது குழந்தைகள் எனது அடிச்சுவடுகளைப் பின்பற்றியதில் எனக்கு ஆச்சரியமில்லை. அவர்கள் கட்சிப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர் மற்றும் சிறு வயதிலிருந்தே அரசியல் சித்தாந்தங்களைப் போற்றி வருகின்றனர். எனது முதல் மகன் கம்யூனிசம் ஒரு வழக்கறிஞராக இருக்கிறார், இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களான லெனினிசம் மற்றும் சோசலிசம் வெள்ளி கொலுசுகள் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர். அவர்களின் தொழில்கள் இருந்தபோதிலும், கட்சி வேலைகளில் அவர்கள் தொடர்ந்து எனது வலுவான கைகளாக இருக்கிறார்கள் – அவர்களின் பெயர்களுக்கு ஏற்ப வாழ்கிறார்கள்.
திங்கள் முதல், எனக்கு 500 க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்திருக்க வேண்டும். இப்போது எனக்கு ஒரு நாளைக்கு 150 அழைப்புகள் வந்துள்ளன. துபாய் மற்றும் பிற இடங்களிலிருந்து எனக்கு அழைப்பு வருகிறது. திருமண ஜோடியின் பெயர் பொறித்த அழைப்பிதழ்கள் வைரலாகியதையடுத்து, பலரும் அழைத்து பேசுகிறார்கள்“ என்றார்.