மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தின் பயணக் கட்டுப்பாடு காரணமாக உணவின்றி பாதிக்கப்பட்டுள்ள ஆதிவாசி குடும்பங்களை சேர்ந்தோருக்கு மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேரடியாக சென்று நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
வாகரை பிரதேசத்தின் ஆதிவாசி மக்களின் தலைவர் அம்பலவர்கே நல்லதம்பி வேலாயுதம் பயணத் தடை காரணமாக தமது மக்கள் உணவின்றி அல்லலுறுவதாக தெரிவித்து இலங்கைக்கான ஆதிவாசிகளின் தலைவர் ஊர்வக்கே வன்னிலத்தோவிடம் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் அவர் மட்டக்களப்பு சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதாத் மாசிங்கவிடம் இவ் விடயம் தொடர்பான கோரிக்கையினை முன்வைத்திருந்தார்.
ஆதிவாசி குடும்பங்கள் உணவின்றி, ஆற்றில் பிடிக்கப்படும் மீனை மட்டும் சாப்பிட்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆதிவாசி மக்களின் குறைகளை கேட்டறிந்து கொண்ட பொலிஸ் அத்தியட்சகர் தமது வழிகாட்டலில் இவ் நடவடிக்கையை முன்னெடுத்ததாக தலைவர் நல்லதம்பி வேலாயுதம் தெரிவித்தார்.
பனிச்சங்கேணி, மாங்கேணி, கிருமிச்சை, குஞ்சன் கல் குளம், கொக்குவில் போன்ற கிராமங்களில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு இவ் நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. தங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கி வைத்த பொலிஸ் அத்தியட்சகர் தலைமையிலான குழுவினருக்கு தமது நன்றியை தெரிவித்ததுடன் மேலும் இது போன்ற தமது மக்கள் ஏனைய கிராமங்களில் வாழ்ந்து வருவதாகவும் அவர்களுக்கும் நிவாரணப் பொதி வழங்க ஏற்பாடு செய்து தருமாறும் தலைவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
இவ் நிவாரண செயற்பாட்டில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் பி.எம்.ஜெயசுந்தர,மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே.ஹெட்டியாராச்சி, ஏறாவூர், வாழைச்சேனை மற்றும் வாகரை பொலிஸ் பொறுப்பதிகாரிகளான ஜெயந்த, தனஞ்சய பெரமுன, ஜ.பி.விஜேயவர்த்தன மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்களும் கலந்து கொண்டனர்.





