முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள உப்புமாவெளி பிரதேசத்தில் யாழ் ஆயர் இல்ல காணியில் சட்டவிரோதமாக பாரிய அளவிலான மணல் அகழ்வு இடம்பெறுவதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்களில் ஒருவரான பீற்றர் இளஞ்செழியன் அவர்கள் சம்பவ இடத்திற்கு நேற்று முன்தினம் (06) மாலை வேளையில் சென்றிருந்தார்
இதன்போது அங்கு சட்டவிரோத குவிக்கப்பட்டிருந்த மணல் குவியலை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்-
உப்புமாவெளி பிரதேசத்தில் 5 ஆயிரம் டிப்பர்களில் ஏற்றக்கூடிய மண் குவியல் குவிக்கப்பட்டுள்ளது. இது ஆயர் இல்லத்திற்கு சொந்தமான காணி என்று சொல்ல முடியும். தற்போது ஆயர் இல்ல காணியில் இரண்டு வகையான மணல் அகழ்வுகள் நடைபெறுகின்றன.
ஒன்று அனுமதிபெற்று. மற்றது அனுமதி அற்ற முறையில் நடக்கின்றன. இது குறித்து ஆயர் இல்லத்தினர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
சட்டவிரோமான இந்த நடவடிக்கை குறித்து மாவட்டத்தில் இருக்கக்கூடிய இராணுவத்தினர் பொலிசார்,தகுதி வாய்ந்த அதிகாரிகள் பலர் இருந்தும் இதனை தடை செய்யமுடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன? அவர்களும் இவர்களுடன் சேர்ந்து கையூட்டல் பெற்று அனுமதி வழங்கியுள்ளார்களா?
இது குறித்து அனைத்து தரப்பினரும் பதில் கொடுக்க வேண்டும். குறிப்பாக யாழ் ஆயர் இல்லம் இதற்கு பதிலளிக்க வேண்டும். இது யாருடைய காணி? எதற்காக இந்த மண் குவிக்கப்பட்டுள்ளது?. யாழ் ஆயர் இல்லம் தான் இந்த மண்ணினை விற்கின்றார்களா?
சட்டவிரோத மணல் குவிக்கப்பட்டுள்ள குறித்த காணியில் இன்னொரு பகுதியில் சட்டபூர்வ மண்ணகழ்வு ஒன்றும் இடம்பெறுகிறது.
ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேல் மக்கள் எதிர்ப்பினை தெரிவித்தும் இதுவரை நிறுத்தப்படவில்லை. தற்போதும் ஆயர் இல்லத்திற்கு பத்து இலட்சம் பணம் சென்றுள்ளதாக அறிகின்றேன்.
நாட்டில் மக்கள் பயணத்தடையினால் முடக்கப்பட்ட நிலையில் இந்த மணல் குவிப்பு இடம்பெற்றுள்ளது. இதற்கு முற்று முழுதான பொறுப்பு ஆயர் இல்லம் தான் சொல்ல வேண்டும். சட்டரீதியான மணல் அகழ்வும் இடம்பெறுகின்றது. சட்டத்திற்கு புறம்பான மணல் அகழ்வும் இடம்பெறுகின்றது. விரைவில் இது நிறுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
150 மீற்றர் நீளம், 25 மீற்றர் அகலம், 2.5 மீற்றர் உயரமான மணல் குவியல் சிக்கியது.
இதேவேளை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியவர்கள் ஏன் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை உடனடியாக உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
இதையடுத்து, முல்லைத்தீவு பொலிஸாருக்கு ஊடகவியலாளர்கள் தகவல் வழங்கியதையடுத்து பொலிசார் அங்கு சென்றனர். இவ்வாறு சட்டவிரோதமாக இடம்பெறும் மணல் அகழ்வு தொடர்பில் பொலிஸாரிரம் வினவியபோது பொலிசாருக்கு குறித்த சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பில் தெரியாது என தெரிவித்தனர்.
தொடர்ந்து குறித்த சட்டவிரோதமாக குவிக்கப்பட்டுள்ள மணலினை பொலிசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.
குறித்த இடத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறித்த காணி உரிமையாளர்கள், அயலவர்களிடம் குறித்த சட்டவிரோத மணல் குவிப்பை செய்தவர்கள் யார் என்பது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து நீதிமன்றை நாடி உரிய திணைக்களங்களுடன் இணைந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுவரை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.












