உலக சுற்றுச்சூழல் தினத்தில் வீதியோரமாக கஞ்சா செடிகளை நட்ட குழுவினரை பொலிசார் தேடி வருகிறார்கள்.
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
ஜூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம். அன்று உலகெங்கும் பலரும் மரம் நட்டார்கள். ஆனால் கேரள மாநிலத்தின் கொல்லம் பகுதியிலுள்ள கந்தாச்சிரா என்ற கிராமத்தில், ஒரு சில நபர்கள் வீதியோரம் கஞ்சா செடிகளை நாட்டி, இது நாங்கள் விரும்பும் மரம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து தகவலறிந்த பொலிசார், சம்பவ இடத்திற்கு சென்று கந்தாச்சிராவில் உள்ள வீதியொன்றின் ஓரமாக நாட்டப்பட்டிருந்த 60 செ.மீ மற்றும் 30 செ.மீ நீளமுள்ள கஞ்சா செடிகளைக் கண்டறிந்தனர்.
‘கஞ்சாவுக்கு அடிமையாகிய’ ஒரு இளைஞன் உலக சுற்றுச்சூழல் தினத்தன்று கஞ்சா செடி நடவு செய்யும் குழுவை வழிநடத்தியதாக பொலிசார் கூறுகிறார்கள். சம்பவ இடத்தில் நின்ற சாட்சியொருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிசார் அங்கு சென்றனர்.
“இந்த மரங்கள் இங்கே வளரட்டும்” என்று அந்த இளைஞர்கள் பகிரங்கமாக கூறி, கஞ்சா செடி நாட்டிதை தமது தொலைபேசிகளில் படமும் பிடித்துள்ளனர். இந்த கஞ்சா பிரியர்கள் இன்னும் பிடிபடவில்லை.
அந்த பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில் முன்னர் அங்கு கஞ்சா பயிரிடப்பட்டதற்கான தடயங்கள் தென்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதன் சூத்திரதாரியை விரைவில் கைது செய்யலாமென பொலிசார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.




