‘த பமிலி மேன்-2’ வெப் தொடரில் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளியாக நடித்தது ஏன் என்பது பற்றி நடிகை சமந்தா விளக்கமளித்துளளார்.
நடிகை சமந்தா முதன்முதலாக ‘த பமிலி மேன்-2’ என்ற வெப் தொடரில் நடித்திருக்கிறார். அதில் இவர் விடுதலைப் புலிகள் அமைப்பின் பெண் போராளியாக நடித்துள்ளார். ஈழத்தமிழர்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் உள்ளதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. இதுபற்றி சமந்தா தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
‘த பமிலி மேன்-2’ வெப் தொடரில் நடிப்பதற்காக என்னிடம் அந்த டைரக்டர் கதை சொல்ல வந்தார். அப்போது இலங்கை தமிழர்கள் பற்றிய ஆவணப்படங்களை திரையிட்டு காண்பித்தனர். அதை பார்த்துவிட்டு என் கண்கள் கலங்கிவிட்டன. என்னால் அழுகையை அடக்க முடியவில்லை. அப்போதே ‘த பமிலி மேன்-2’ வெப் தொடரில் நடிக்க முடிவு செய்தேன். அதில் எனக்கு ராஜி என்ற தீவிரவாத பெண் வேடம். கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்தேன். கதை சம்பவங்கள் முழுவதும் இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் நடப்பது போல காட்டியிருந்தார்கள்.
ராஜி, மிக கவனமாக கையாளப்பட வேண்டிய கதாபாத்திரம். நான் அதை புரிந்துகொண்டு நடித்தேன். ஈழ தமிழர்களின் துன்பங்களையும், துயரங்களையும் ராஜி கதாபாத்திரத்தின் மூலம் சித்தரித்திருந்தார்கள். இலங்கை தமிழர்கள் இலட்சக்கணக்கில் வீடு வாசல்களை இழந்து வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்திருக்கிறார்கள். அதுபோன்ற காட்சிகளும் உள்ளன. யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. கதையும், காட்சிகளும் கற்பனையாக சொல்லப்பட்டு இருந்தன. இலங்கை போரில் மரணம் அடைந்த தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்த வேண்டும். அதை இந்த படம் நிறைவு செய்யும் என சமந்தா கூறியிருக்கிறார்.




