அடுத்த வெள்ளிக்கிழமை யூரோ கிண்ணக் காற்பந்துப் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், நேற்று முன்தினம் நடந்த ஆயத்த ஆட்டத்தில் செக் குடியரசை 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி தோற்கடித்தது,
சீரோ இம்மொபிலே 23வது நிமிடத்தில் இத்தாலியின் கோல் கணக்கைத் தொடங்கி வைக்க, நிக்கோலோ பரெல்லா, லொரென்சோ இன்சீன்ய, டொமெனிக்கோ பெராடி ஆகியோர் ஆளுக்கு ஒரு கோலைப் போட்டு, வெற்றியை உறுதிப்படுத்தினர்.
இத்தாலி பயிற்றுநர் ரொபெர்ட்டோ மன்சினி மிகச் சிறந்ததொரு குழுவை உருவாக்கி, ஆட்டக்காரர்கள் தங்களின் திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்துவதற்கான சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளதாகக் கூறினார் இன்சீன்ய.
வரும் 11ஆம் திகதி ரோமின் ஒலிம்பிக் விளையாட்டு அரங்கில் நடக்கவுள்ள முதல் ஆட்டத்தில் துருக்கியை எதிர்கொள்ள இருக்கிறது ‘ஏ’ பிரிவில் இடம்பெற்று உள்ள இத்தாலி.
சுவிட்சர்லாந்தும் வேல்சும் அந்தப் பிரிவில் இடம்பெற்று இருக்கும் மற்ற இரு அணிகள். இங்கிலாந்து, ஸ்கொட்லாந்து, குரோவேஷியா ஆகிய அணிகளுடன் ‘டி’ பிரிவில் இடம்பெற்றுள்ள செக் குடியரசு, நாளை மறுநாள் நடக்கவிருக்கும் இன்னோர் ஆயத்த ஆட்டத்தில் அல்பேனியாவுடன் மோதவிருக்கிறது.




