ஆபிரிக்க நாடான காங்கோ ஜனநாயகக் குடியரசு (டி.ஆர்.சி) மற்றும் ருவாண்டாவின் எல்லையில் ஏற்பட்ட தொடர்ச்சியான பூகம்பங்கள், அங்கு எரிமலை வெடிப்பு ஏற்பட்ட மூன்று நாட்களுக்குப் பிறகு, நைராகோங்கோ எரிமலை மீண்டும் வெடிக்குமோ என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது.
கடந்த சனிக்கிழமையன்று நைராகோங்கோ எரிமலை வெடிக்கத் தொடங்கியது. ருவாண்டாவின் எல்லையை நோக்கிச் சென்ற எரிமலைக் குளம்புகள், ஞாயிற்றுக்கிழமை காலை ஒருவழியாக வெடிப்பதை நிறுத்தியது. எனினும், இதில் டஜன் கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்தனர்.
இந்நிலையில், நேற்று காங்கோ மற்றும் ருவாண்டாவின் எல்லையில் 5.3 ரிக்டர் அளவில் மிதமான அளவிலான நிலநடுக்கம் பதிவானது. மேலும் சனிக்கிழமையன்று நைராகோங்கோ எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட 100’க்கும் மேற்பட்ட அதிர்வலைகளில் இதுவே மிக வலிமையானது.
சனிக்கிழமையன்று நைராகோங்கோ எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து, கிழக்கு டி.ஆர்.சியின் எல்லையான மேற்கு ருவாண்டாவின் ருபாவ் மாவட்டத்தில் தொடர்ச்சியான பூகம்பங்கள் ஏற்பட்டன. குடியிருப்பு மற்றும் வணிக வீடுகள், பள்ளிகள் மற்றும் முர்ரம் மற்றும் டார்மாக் சாலைகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது என்று ருவாண்டாவின் ரூபாவ் மாவட்ட மேயர் கில்பர்ட் ஹபரியமனா தெரிவித்தார்.
இதற்கிடையே, டி.ஆர்.சியின் வடகிழக்கு மாகாணமான வட கிவுவில் நைராகோங்கோ எரிமலை வெடித்ததில் நேற்று இறந்தவர்களின் எண்ணிக்கை 32 ஆக உயர்ந்தது. மேலும் இது உயரக்கூடும் என்று டி.ஆர்.சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரெஸின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக், உயிர் இழப்பு ஐ.நா. பொதுச்செயலாளருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், குட்ரெஸ் அரசாங்கத்திற்கும் டி.ஆர்.சி மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததாகக் கூறினார்.



