வெலிகம பகுதியில் ஒருவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் 2 பொலிசார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மே 17 ஆம் திகதி நடந்த இந்த சம்பவம் சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளது. முன்னதாக, வீதியில் விழுந்து கிடந்த ஒருவரின் உடலின் மேலாக பேருந்து ஏறிச் செல்லும் காட்சிகள் மட்டும் வெளியாகியது.
அது ஒரு விபத்து என பொலிஸ் தரப்பினால் கூறப்பட்டது.
எனினும், புதிய காட்சிகள் இன்று வெளிவந்துள்ளன. ஒருவரால் தாக்கப்பட்ட பின்னர் தரையில் மயக்கமடைந்து விழுந்த நபரின் மீதே பேருந்து ஏறிச் சென்றது.
இந்த சம்பவம் நடந்த போது, இரண்டு பொலிசார் அங்கு நின்றிருந்தனர். தாக்கப்பட்டவர் நிலத்தில் வீழ்ந்த பின்னர் பொலிசார் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பொலிஸ் பேச்சாளர் டி.ஐ.ஜி அஜித் ரோஹன கூறுகையில், இரண்டு பொலிசாரும் குற்றத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை அல்லது பாதிக்கப்பட்டவருக்கு உதவாததால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, வெலிகம பொலிசார் அவரை தாக்கி ஓடும் பேருந்தின் சக்கரத்திற்குள் அவரை தள்ளிவிட்டதாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் குற்றம்சாட்டியதுடன், சம்பவம் தொடர்பான சிசிரிவி காட்சிகளை வெளியிடுமாறு வலியுறுத்தி வந்தனர்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்த குடும்பமொன்றை சேர்ந்த குடும்பத் தலைவர், உணவிற்காக வெளியில் சென்றதாக குடும்பத்தினர் கூறுகிறார்கள். அது குறித்து சுகாதார பரிசோதகரிற்கு தொலைபேசியில் அறிவித்து விட்டே வெளியில் சென்றதாக அவர்கள் கூறுகிறார்கள்.
முன்னதாக இந்த விவகாரத்தில், நபரை தாக்கிய தமிழ் இளைஞனும், பேருந்து சாரதியும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
தற்போது இரண்டு பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர்.