மைக்ரோசாப்ட் கார்ப்பரேஷனில் உள்ள வாரிய உறுப்பினர்கள் 2020’ஆம் ஆண்டில், அதன் இணை நிறுவனர் பில் கேட்ஸ் தொடர்ந்து தனது குழுவில் அமர்ந்திருப்பது பொருத்தமானதல்ல என்று முடிவெடுத்ததாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. ஒரு பெண் மைக்ரோசாஃப்ட் ஊழியருடன் பில்கேட்ஸின் முந்தைய காதல் உறவை விசாரித்த நிலையில், அவர் தொடர்ந்து நீடிப்பது பொருத்தமற்றது என்று கருதப்பட்டது .
பெயரிடப்படாத ஆதாரங்களை மேற்கோள் காட்டி, ஜர்னல் ஆன்லைனில் நேற்று இந்த செய்தியை வெளியிட்டது. இந்த விவகாரத்தை ஆராயும் குழு உறுப்பினர்கள் 2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஒரு சட்ட நிறுவனத்தை இதற்காக பணியமர்த்தியதாக கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் பெண் பொறியாளர் ஒருவர் கடிதத்தில் பல ஆண்டுகளாக கேட்ஸுடன் பாலியல் உறவு வைத்திருப்பதாக குற்றம் சாட்டியதை அடுத்து விசாரணை நடத்தப்பட்டது.
வாரியத்தின் விசாரணை முடிவதற்குள் கேட்ஸ் ராஜினாமா செய்ததாக ஜர்னல் தெரிவித்துள்ளது.
கேட்ஸின் பெயரிடப்படாத செய்தித் தொடர்பாளர் தி ஜர்னலுக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விவகாரம் இருப்பதாக ஒப்புக் கொண்டார். மேலும் அது இணக்கமாக முடித்து வைக்கப்பட்டது எனக் கூறப்படுகிறது. செய்தித் தொடர்பாளர் தி ஜர்னலிடம் குழுவில் இருந்து மாறுவதற்கான அவரது முடிவு இந்த விஷயத்தில் எந்த வகையிலும் தொடர்புடையது அல்ல என்று கூறினார்.
கடந்த ஆண்டு அவர் மைக்ரோசாப்ட் குழுவிலிருந்து வெளியேறியபோது, பில் கேட்ஸ், தொண்டு சேவைகளில் கவனம் செலுத்துவதற்காக விலகுவதாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக இந்த மாத தொடக்கத்தில், பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் திருமணமான 27 வருடங்களுக்குப் பிறகு விவாகரத்து செய்வதாக அறிவித்தனர். ஆனால் உலகின் மிகப்பெரிய தொண்டு நிறுவனங்களில் ஒன்றான பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் தொடர்ந்து பணியாற்றுவதாக அறிவித்தனர்.




