தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தக்தே புயலாக உருவானது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள லட்சத் தீவு பகுதிகளில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலு பெற்றதை தொடர்ந்து, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் சில இடங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அதே அரபிக்கடல் பகுதியில் நிலைகொண்டு இருந்தது. இந்த நிலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று காலை புயலாக உருவானது. இந்த புயலுக்கு தக்தே என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவானது. டவ்தே புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து 18ம் தேதி குஜராத்தில் கரையை கடக்கிறது.
இந்த புயல் காரணமாக தமிழகத்தில் 18ம் தேதி வரை மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும்
அதேபோல் நாளையும், நாளை மறுதினமும் (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது. 18ம் தேதி நீலகிரி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
கேரளா, கர்நாடகா, தமிழகம், மராட்டியம், கோவா, குஜராத் மாநிலங்களில் புயலின் தாக்கம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கனமழை பெய்யும் பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாமிட்டுள்ளனர்.




