கள் விற்பனை நிலையங்களை மூடுவதன் மூலம் அதனை வாழ்வாதார தொழிலாக செய்து
வருகின்ற ஏழைக் குடும்பங்களே பெரிதும் பாதிக்கப்படும் நிலை ஏற்படும் எனவே
அவர்களின் குடும்ப நிலைமையினை கருத்தில் கொண்டு கள் விற்பனை நிலையங்களை
நிபந்தனையுடன் திறப்பதற்கு அனுமதிக்குமாறு முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு. சந்திரகுமார்
பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதிய குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக கள் விற்பனை நிலையங்களை மூடுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கும் விடயமாகும். ஏனெனில் இக் குடும்பங்கள் அனைத்தும் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்கள் என்பதோடு, தற்போதைய காலம் கள் உற்பத்திக்கான பருவ காலமாகும் எனவு இக் காலத்தில் கள் விற்பனை கடைகளை மூடுவதனால் அவர்களின் பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும்.
எனவே தாங்கள் இவ் விடயத்தில் அதிக கவனம் செலுத்தி பின்வரும்
நடைமுறைகளுக்கு அமைவாக கள் விற்பனை நிலையங்களை திறப்பதற்கு
அனுமதியளிக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன்.
அதாவது நுகர்வோர் கள் விற்பனை நிலையங்களில் வைத்து அருந்துவதனை தடுத்து கொள்வனவு செய்து செல்வதற்கும், களஞ்சியத்தில் உள்ள போத்தலில் அடைக்கப்பட்ட கள் அல்லது புதிதாக உற்பத்தி செய்கின்ற கள்ளை போத்தலில் அடைத்து விற்பனை செய்யும்
நடைமுறைகளுக்கு அமைவாக திறப்பதற்கு தாங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். தனது கடித்தில் குறிப்பிட்டுள்ளார்.




