சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 15 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 19 காசுகளும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. லோக்சபா, சட்டசபை தேர்தல் நேரங்களில் இதில் மாற்றம் இருக்கும். தமிழகத்தில் கடந்த 19 நாட்களாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் விற்பனை செய்யப்பட்டது.
19 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலையில் நேற்று மாற்றம் செய்யப்பட்டது. சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 92.55 ரூபாய், டீசல் லிட்டர் 85.90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்றும் பெட்ரோல் விலை 15 காசுகள் உயர்ந்து லிட்டர் 92.70 ரூபாய்க்கும், டீசல் விலை 19 காசுகள் உயர்ந்து லிட்டர் 86.09 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த புதிய விலை நிர்ணயம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை ஆறு முறை மட்டுமே பெட்ரோல், டீசல் விலை மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானதை அடுத்து, இனி தினமும் அவற்றின் விலை மாற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல் விலை உயர்வு வாகன ஓட்டிகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.




