ஏப்ரல் 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக இலங்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனின் கேரளா தொடர்புகள் குறித்து இந்தியாவின் புலனாய்வுப் பணியகம் மற்றும் கேரள காவல்துறை விசாரணை நடத்தியுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கேரளாவில் பதியுதீன் கொண்டிருந்த தொடர்புகளின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
2009 ஆம் ஆண்டில் அவர் காசர்கோடு விஜயம் செய்ததையும், கேரளாவில் ஒரு சில மதத் தலைவர்களுடன் அவருக்கு அறிமுகமானதையும் விசாரயைாளர்கள் ஆராய்கிறார்கள்.
2013 ஆம் ஆண்டில் இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சராக இருந்தபோது அவர் சென்னையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவரை சந்தித்தவர்கள், இலங்கை சென்று அவரைச் சந்தித்தவர் பற்றியும் விசாரணையாளர்கள் ஆராய்கிறார்கள்.
உளவுத்துறை அதிகாரிகளின் தகவல்படி, ரிஷாத்தின் தந்தை காசர்கோடு பட்னாவைச் சேர்ந்தவர், அவர் இப்பகுதியில் ஒரு சில நபர்களுடன் தொடர்பு கொண்டிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து கேரள இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார். தற்கொலைதாரியுடன் அவர் தொடர்பிலிருந்தார்.
கேரளாவின் பட்னாவை சேர்ந்த 5 இளம் முஸ்லிம் குடும்பங்கள் காணாமல் போயிருந்தன. ஐ.எஸ் அமைப்பின் சேர, 2016 இல் சிரியா புறப்பட்ட இவர்கள், தௌஹீத் ஜமா அத்துடன் தொடர்பு கொண்டிருந்ததாகவும், சிலர் சிரியா செல்ல முன்னர் மத போதனைக்காக இலங்கை வந்ததாகவும், இந்த பின்னணியில் ரிஷாத்தின் கேரள தொடர்பை இந்திய உளவு அமைப்புக்கள் ஆராய்ந்து வருவதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.




