மேலும் இரண்டு முன்னாள் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கோட்டாபய அரசில் உயர் பதவிகளிற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் தூதராகவும், இன்னொருவர் அமைச்சின் செயலாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தாலிக்கான இலங்கையின் புதிய தூதராக ஏயார் சீஃப் மார்ஷல் சுமங்கள டயஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து அமைச்சுக்களின் செயலாளர்கள் பாராளுமன்றத்தில் உயர் பதவிகளுக்கான குழுவின் ஒப்புதலைப் பெற்றுள்ளதாக, பாராளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிக தசநாயக தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் உயர் பதவிகள் குழுஇந்த ஒப்புதலை அளித்தது.
அதன்படி, நீர்ப்பாசன அமைச்சின் செயலாளராக அனுர திசாநாயக்கவும், நகர அபிவிருத்தி மற்றும் வீட்டுவசதி அமைச்சின் செயலாளராக சிரினிமல் பெரேராவும், பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸூம் நியமிக்கப்பட உயர்பதவிகளிற்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளராக திருமதி பத்ரானி ஜெயவர்தனவும், காணி, காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக ஆர்.ஏ.கே. ரணவக்கவும் நியமிக்கப்பட குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்தாலிக்கான இலங்கையின் புதிய தூதராக ஏயார் சீஃப் மார்ஷல் சுமங்கள டயஸை நியமிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது என்று தம்மிக தசநாயக்க இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்தா யாப்ப அபேவர்தன தலைமையில் கூடிய, உயர் பதவிகள் குறித்த குழுவில் சபைத் தலைவர் தினேஷ் குணவர்தன, அரச தரப்பு பிரதம கொறடா ஜான்ஸ்டன் பெர்னாண்டோ, அமைச்சர்கள் சமல் ராஜபக்ஷ, நிமல் சிறிபாலா டி சில்வா, உதய கம்மன்பில, ரமேஷ் பத்திரன, சுதர்ஷினி பெர்னாண்டோபுல்லே மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜோன் செனவிரத்ன, அனுர பிரியததர்சன பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மற்றும் த.சித்தார்த்தன் கலந்து கொண்டனர்.



