இந்தியா இரண்டாவது கொரோனா அலையினால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது இதன் காரணமாக தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தலைநகர் டெல்லியில் ஒக்சிசன் பற்றாக்குறை காரணமாக கடந்த சில நாட்களில் 50க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் பாகிஸ்தான், பிரான்ஸ், பூடான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் உதவ முன்வந்துள்ளன.இதற்கிடையில் இந்தியாவுக்கு உதவ தயார் என்றும் ரஷ்யா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரஷ்யா வெளியிட்ட அறிக்கையில், “ 3,00,000 முதல் 4,00,000 வரையிலான ரெம்டெசிவிர் மருந்துகள் மற்றும் ஒக்சிசன் இந்தியாவுக்கு இன்னும் 15 நாட்களில் வர உள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. விமானங்கள் மூலம் ஒக்சிசன் டேங்கர் லாரிகளை அனுப்பி வருகிறது, ரயில்கள் மூலம் ஒக்சிசன் எக்ஸ்பிரஸ் பல்வேறு மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அதுபோலவே தடுப்பூசி போடும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. மே 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கான பதிவு வரும் 28ம் தேதி முதல் தொடங்குகிறது.




