ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன் 12 சீரிஸ் மற்றும் பழைய மொடல்களின் சில்லறை பெட்டியிலிருந்து சார்ஜர் மற்றும் இயர்பாட்களிலிருந்து சார்ஜரை நீக்கப்போவதாக அறிவித்தபோது, பல வாடிக்கையாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனெனில் ஆண்ட்ராய்டு OEM கள் சார்ஜரை போனுடன் வழங்குகின்றன.
ஆப்பிள் சார்ஜரை நீக்கியது செலவை மிச்சப்படுத்துவதற்கும் அதிக லாபம் பெறுவதற்கும் தான் என்று பலர் கூறினர். இருப்பினும், ஆப்பிள் நிறுவனம், குறைந்த பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதன் மூலம் கார்பன் அளவை குறைக்கவும், 2030 ஆம் ஆண்டளவில் ஆப்பிள் நிறுவனத்தை ‘கார்பன் நியூட்ரல்’ நிறுவனமாக ஆக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தது. இப்போது, கடந்த 2020 ஆண்டிற்கான அறிக்கை வெளியாகியுள்ளது.
ஆப்பிளின் மினி-தளத்தில் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட சமீபத்திய ‘சுற்றுச்சூழல் முன்னேற்ற அறிக்கை’ (Environmental Progress Report) தகவலின்படி, குப்பெர்டினோவை தளமாகக் கொண்ட நிறுவனம் ஐபோன் பெட்டிகளிலிருந்து பவர் அடாப்டர்களை நீக்கியதன் மூலம் கடந்த ஆண்டில் மட்டும் 861,000 மெட்ரிக் டன் தாமிரம், தகரம் மற்றும் துத்தநாக தாதுக்களை சேமித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஐக்ளவுட், சிரி மற்றும் ஐமெசேஜ் போன்ற சில கிளவுட்-அடிப்படையிலான மற்றும் AI சேவைகளும் இப்போது முழுமையாக நிலையான ஆற்றலில் இயங்குகின்றன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வன்பொருட்களை பொறுத்தவரை, மேக் மினிக்கான இன்டெல் சிப்களிலிருந்து ஆப்பிள் M1 சிப்பிற்கு மாறியதன் மூலம், ஒட்டுமொத்த கார்பன் அளவில் 34% குறைக்க முடிந்ததாக தெரிவித்துள்ளது.
டென்மார்க்கின் எஸ்ப்ஜெர்கில் உள்ள ஐபோன் தயாரிப்பாளரின் காற்றாலை விசையாழிகள் ஒவ்வொரு ஆண்டும் 20,000 வீடுகளுக்கு மின்சாரம் தரும் ஆற்றலை உற்பத்தி செய்கின்றன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறம், ஆப்பிளின் விநியோகச் சங்கிலியில் கொண்டுவரப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 8 மில்லியன் மெட்ரிக் டன் கார்பன் வெளியேற்றத்தைத் தவிர்க்க உதவியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும், நெட்டிசன்கள் இதெல்லாம் நம்புகிற மாதிரியாங்க இருக்கு? எப்படியும் சார்ஜரை தனியாவும் விற்பனை செஞ்சுகிட்டு தான இருக்காங்க. அப்போ மட்டும் கார்பன் அளவு அதிகம் ஆகாதா என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.




