உயிர்த்த ஞாயிறுதின தற்கொலை குண்டு தாக்குதல் மதத்தை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டதல்ல, சிலரது அரசியல் அதிகாரங்களை பலப்படுத்திக் கொள்ளவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது என பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறுதின குண்டுதாக்குதல்களின் போது உயிரிழந்தவர்களை நினைவுக் கூறுவதற்காக , பொரளை மற்றும் மாதம்பிட்டி பொது மயானத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியை நேற்று ஞாயிற்றுக்கிழமை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை திறந்து வைத்திருந்தார்.
இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மனித வாழ்க்கை என்பது மிகவும் பெறுமதி மிக்கதாகும். அதனை எந்தவொரு பொருளுடனும் ஒப்பிட்டு தாழ்த்தி பேச முடியாது. சுயநல எண்ணங்கள் நிறைந்த உலகத்தில் மனித உயிர்கள் மிகவும் தாழ்த்தப்பட்டு மதிப்பிடப்படுகின்றன.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறுதினத்தில் எங்கள் சகோதரர்கள் தாக்கப்பட்டது மத தீவிரவாதத்தால் அல்ல. மதத்தின் மீது கொண்ட பற்றின் காரணமாக இந்த தாக்குதல் இடம்பெறவில்லை. மாறாக, ஒரு அரசியல் குழுவினரால் தங்கள் அரசியல் சக்தியை வலுப்படுத்துவதற்காக, தாக்குதல்தாரிகளை சிப்பாய்களாக பயன்படுத்திக் கொண்டனர்.
இதில் மத வெறி அல்லது மத பற்றை நாம் காணவில்லை. மாறாக சில சக்திகள் தமது அரசியல் நிலைப்பாட்டை பலப்படுத்துவதற்கான முயற்சிகளே நடந்தது.
இது தொடர்பில் இலங்கையர் என்ற வகையில் நாம் வெட்கமடைய வேண்டும். எமது சுயநலத்திற்காக இன்னுமொரு மதம் , இனம் மற்றும் மொழியைச் சார்ந்தவரை நாம் துன்புறுத்தியுள்ளோம்.
இந்நிலையில் தனது பலத்தை காண்பிப்பதற்காக இன்னெமொருவரை கொலைச் செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதேவேளை ஒரு மதம் , இனம் அல்லது மொழியைச் சார்ந்தவர்களுக்கு இடையூறு செய்வதையும் தவிர்த்ததுக் கொள்ள வேண்டும்.
இத்தகைய செயற்பாடுகள் காரணமாக முழு உலகமே அசுந்தமானதாகவே விளங்கும். அதனால் , அனைவரும் தங்களது வாழ்க்கையில் மற்றுமொருவரின் வாழ்வுக்கு உதவிகளை செய்வதை வழக்கமாக்கி கொள்ள வேண்டும்.
இதேவேளை உயிர்த்தஞாயிறுதின குண்டு தாக்குதலின் போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.