தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கு கொரோனா பாதிப்பால் உண்டாகும் தீவிரத் தன்மைகள் ஏற்படுவதில்லை என்று அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கலிபோர்னியா மருத்துவ ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், ”நாங்கள் இது தொடர்பாக 50,000 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளோம். இதில் உடற்பயிற்சியைத் தங்களது தினசரியாகக் கொண்டவர்கள் கொரோனாவின் தீவிர பாதிப்புக்கு உள்ளாவதில்லை. மேலும், அவர்களில் பெரும்பாலானவர்கள் இலேசான அறிகுறிகளுடன் குணமடைந்துள்ளனர். இறப்பும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ”உடற்பயிற்சி மேற்கொள்வது மிக மிக அவசியம். உடல் அசைவுகள் இருக்கும் போதுதான் நுரையீரல் செயல்பாடு சிறப்பாக இருக்கும். நுரையீரல் செயல்பாடு சரியாக இருந்தால் கோவிட்-19 வைரஸால் நுரையீரலில் தாக்குதல் ஏற்படுவது குறையும். நுரையீரலில் இருந்து கிருமிகள் வோஷ் அவுட் ஆகும். அதனால், ஆரோக்கியமான உணவுடன் அன்றாட உடற்பயிற்சிகளையும் கைவிடாதீர்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



