2004-ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம், ‘அந்நியன்’. சைக்கலாஜிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகிய இந்தப் படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் இன்றளவும் மனதில் நிற்பவை. கிட்டத்தட்ட 16 ஆண்டுகள் கழித்து, இந்தப் படத்தை பொலிவுட்டில் ரீமேக் செய்யவிருக்கிறார்.
‘2.0’, படம் 3டியில் உருவானதால் ப்ரீ புரொடக்ஷன், போஸ்ட் புரொடக்ஷன் என ஏகப்பட்ட வேலைகள் இருந்ததால் சில காலம் கழித்துதான், வெளியானது. அதனைத் தொடர்ந்து, ‘இந்தியன் 2’ படத்தின் வேலைகளில் பிஸியானார் ஷங்கர். சில காரணங்களால் இடைவெளி விட்டுவிட்டு படப்பிடிப்பு நடந்தது. பிறகு, கொரோனா வந்து பெரிய இடைவெளியாகிவிட்டது. ஷூட்டிங் நடந்தபோது, விபத்து நிகழ்ந்து அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின், கமல்ஹாசன் சட்டமன்ற தேர்தல் வேலைகளில் பிஸியாகிவிட்டார். பின், ‘இந்தியன் 2’ பற்றிய எந்தவொரு அப்டேட்டும் வராமல் இருந்தது. இந்நிலையில், டோலிவுட்டில் ராம் சரணை இயக்கவிருக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் சிரஞ்சீவியும் இணைகிறார் என்ற தகவலும் வெளியானது. இந்தப் படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார். இவர்தான், முதலில் ‘இந்தியன் 2’ படத்தை தயாரிப்பதாக இருந்தது. அதன் பின்தான், லைகா நிறுவனம் உள்ளே வந்தது.
ராம் சரண் படத்திற்கான பணிகள் நடைபெற்று கொண்டிருந்த சமயத்தில், “பொலிவுட்டில் ரன்வீர் சிங்கை வைத்து ஒரு படம் ஷங்கர் ண்ணப்போறாராமே” என்ற தகவல்கள் அரசல் புரசலாக வெளியாயின. தற்போது, அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. ‘முதல்வன்’ படத்தை அனில் கபூரை வைத்து பொலிவுட்டில் ‘நாயக்’ என்ற பெயரில் ரீமேக் செய்திருந்தார் ஷங்கர். அந்தப் படம் 2001-ம் ஆண்டு வெளியானது. அதனைத் தொடர்ந்து, 20 ஆண்டுகள் கழித்து, தற்போது, ‘அந்நியன்’ ரீமேக்கிற்காக பொலிவுட்டிற்கு சென்றிருக்கிறார். இதில் ரன்வீர் சிங் நாயகனாக நடிக்கிறார். பென் ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் 2022-ல் தொடங்கவிருக்கிறது.