அரசியல்வாதிகள் தமது அரசியல் பலத்தினை பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் மாடறுப்பு செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாக சிவசேனை அமைப்பின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் தமிழ்த்திரு அ.மாதவன் தெரிவித்தார்.
இலங்கை அரசியல் அமைப்பில் சைவசமயத்திற்கு முன்னுரிமை விதி, மதமாற்றத் தடைச்சட்டத்தை ஏற்படுத்து, மாடு வெட்டத் தடைவிதி போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி அடையாள உண்ணாவிரத போராட்டம் ஒன்று வவுனியா சிதம்பரபுரம் பழனிமுருகன் ஆலயத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டது.
குறித்த போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
எமது பகுதிகளிலும் பசுவதை செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்றுவருகின்றது. சில அரசியல் வாதிகள் தமது அரசியல் பலத்தினைவைத்துக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான வகையில் அதிகளவான மாடுகளை வெட்டும் செயற்பாட்டினை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியாவை பொறுத்தவரை பசுவதை செயற்பாடுகளை யார் முன்னெடுக்கின்றார்கள் என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். எனவே இந்த செயற்பாடுகள் உடனடியாக முற்றாக நிறுத்தப்பட வேண்டும். அத்துடன் ஒருவரது மனோநிலையை பயன்படுத்தி மதமாற்றத்தினை ஏற்படுத்தும் செயற்பாடுகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது. இவை தடுக்கப்பட்டு புதிய அரசியல் அமைப்பிலே இந்தவிடயங்களும் உள்ளடக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி குறித்த உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.




