வளர்ப்புப் பிராணிகள் உள்ளிட்ட விலங்குகளுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய கால்நடை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
விலங்குகளுக்கான `உலகின் முதல்’ கோவிட் தடுப்பூசியை அறிமுகப்படுத்தியிருக்கிறது ரஷ்யா. வளர்ப்புப்பிராணிகள் உள்ளிட்ட விலங்குகளுக்குப் பயன்படுத்தக்கூடிய ஒரு கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு அண்மையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று ரஷ்ய கால்நடை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்தத் தடுப்பூசியை செல்லப்பிராணிகளுக்கும், பண்ணை விலங்குகளுக்கும் செலுத்தலாம். இந்த மாதம் முதல் இதன் தயாரிப்புப் பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தடுப்பூசி விலங்குகளில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க உதவும். அதோடு, கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து புதிய வைரஸாக மாறுவதையும் தவிர்க்க உதவக்கூடும் என்று கால்நடை மேற்பார்வை அமைப்பைச் சார்ந்த விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
கர்னிவாக்-கோவ் எனப்படும் இந்தத் தடுப்பூசி மருத்துவப் பரிசோதனைகளின்போது, பூனைகள், நாய்கள், நரிகள், கீரி மற்றும் பிற விலங்குகள்மீது பரிசோதிக்கப்பட்டது. இந்த விலங்குகள் அனைத்தும் கொரோனா வைரஸுக்கு எதிரான ஆன்டிபாடிகளை உருவாக்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. விலங்குகளுக்குச் செலுத்தப்படும் இந்தத் தடுப்பூசி குறைந்தது ஆறு மாதங்களுக்குப் பாதுகாப்பை அளிக்கும்.
இப்போது, விலங்குகளும் கொவிட் வைரஸை பரப்பக்கூடும் என்பதற்கான பல சான்றுகள் கிடைத்துள்ளன. ஆரம்பத்தில் இந்த வைரஸ் வெளவால்களிலிருந்து தோன்றியதாகக் கருதப்பட்டது. கடந்த ஆண்டு, உலகெங்கிலும் இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகள் பற்றிய தகவல்கள் ஆராயப்பட்டன, அவற்றில் சிறிய எண்ணிக்கையிலான பூனைகள் மற்றும் நாய்கள், சிங்கங்கள், புலிகள் மற்றும் கொரில்லாக்களும் இருந்தன. கொரோனாவால் பாதிக்கப்பட்ட விலங்குகள் பட்டியலில் ஒரே ஒரு மரநாயும் இடம்பிடித்திருந்தது.
ஆனால், இவை எல்லாவற்றையும்விட மிங்க் என்கிற மென் மயிர்த் தோல் கொண்ட ஒரு சிறிய விலங்கு வகை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தது. இந்த சிறுவிலங்கு அதன் முடிக்காக பண்ணைகளில் அதிக அளவு வளர்க்கப்படுகிறது. இந்தப் பண்ணைகளிலிருந்தே நெதர்லாந்து, டென்மார்க், போலந்து நாடுகளில் மனிதர்களுக்கு கொரோனா பரவியதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்காவிலும் இவ்வகை பரவல் இருக்கக்கூடும்.
ரஷ்யாவின் அரசு கால்நடை சேவைக்கு தலைமை தாங்கும் கான்ஸ்டான்டின் சாவென்கோவ், தங்கள் நிறுவனம் எதிர்காலத்துக்காகவே இந்தப் பணியைச் செய்திருப்பாகக் கூறியிருக்கிறார். “ஒருவேளை கொரோனா வைரஸ் வேறோர் எதிர்மறையான திருப்பத்தைக் கொண்டுவந்தால் அப்போது அதைச் சமாளிப்பதைவிட, இப்போதிருந்து அதைத் தடுக்கவே தயாராக இருக்க வேண்டும்” என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.