ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றியடமாகியுள்ளதையடுத்து, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அஜித் மானப்பெரும பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாகவுள்ளார்.
சிறை தண்டனை அனுபவித்துவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவின், பாராளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளதாக பாராளுமன்ற செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார் என சபாநாயகர் இன்று சபையில் அறிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன்னறிவிப்பு எதுவும் இன்றி தொடர்ச்சியாக 3 மாதங்கள் சபை அமர்வில் பங்கேற்காவிட்டால் அவர் பாராளுமன்ற உறுப்புரிமையை இழந்துவிடுவார்.
எனவே, ரஞ்சனின் பதவியை பாதுகாக்கும் நோக்கில் அவருக்கு 3 மாதங்கள் விடுமுறை வழங்குவதற்கான யோசனையை எதிர்க்கட்சித் தலைவர் முன்வைத்திருந்தாலும் அதனை சபாநாயகர் ஏற்கவில்லை.
இதனால் ரஞ்சனின் நாடாளுமன்ற ஆசனம் வெற்றிடமாகியுள்ளது.
அவரது வெற்றிடத்திற்கு, கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ளவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவாவார். இதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியாகும்.
2020 நடைபெற்ற பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஐந்து ஆசனங்கள் கிடைத்தன.
விருப்பு வாக்கு பட்டியலில் 103,992 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்த ரஞ்சன் எம்.பி.பதவியை இழக்ந்துள்ளதால், 6 ஆம் இடத்தில் உள்ள அஜித் மானப்பெரும எம்.பியாக தெரிவாகும் நிலை உருவாகியுள்ளது.
மேயர், மேல் மாகாணசபை உறுப்பினர் பதவிகளை வகித்துள்ள அஜித் மானப்பெரும, 2010 ஆம் ஆண்டு தேர்தலிலும், இது போன்ற ஒரு சூழ்நிலையால் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
அந்த பொதுத்தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் போட்டியிட்டிருந்தாலும் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகவில்லை.
எனினும், 2013 மே 30 ஆம் திகதி ஐக்கிய தேசியக்கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ஜயலத் ஜயவர்தன உயிரிழந்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு அஜித் மானப்பெரும நியமிக்கப்பட்டார்.
2015 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் போட்டியிட்டு அஜித் மானப்பெரும வெற்றிபெற்றார்.
2020 பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட அவர் நாடாளுமன்றம் தெரிவாகவில்லை. விருப்பு வாக்கு பட்டியலில் 6ஆம் இடத்தை பிடித்தார். தற்போது ரஞ்சனின் பதவி பறிபோகும் நிலை உள்ளதால் மீண்டும் அவர் நாடாளுமன்றம் வரவுள்ளார்.