சொந்த ஊரில் பாடசாலை மூடப்படும் நிலையில் யோகேஸ்வரன் ஐயா அரசியல் செய்வதில் என்ன பலன் என்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் ஆலங்குளம் மற்றும் குகநேசபுரம் கிராமங்களுக்குச் சென்று அப்பகுதி மக்களை சந்தித்து அவர்களது தேவைகளை கேட்டறிந்ததன் பின்னர் உரையாற்றும் போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தெடரந்து உரையாற்றுகையில்,
கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பனராக இருந்த யோகேஸ்வரன் ஐயாவின் சொந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலை மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தான் பிறந்த பிரதேசத்தில் உள்ள பாடசாலைக்கு மூடுவிழா வைத்து விட்டு அரசியல் செய்வதில் என்ன பிரயோசனம். இப்படிப்பட்டவர்கள் தான் கடந்த காலங்களில் மக்களின் வாக்குகளால் மக்கள் பிரதிநிதிகளாக இருந்தவர்கள்.
என்னை இல்லாமல் செய்ய வேண்டும் என்னை அழிக்க வேண்டும் என்று எதிரிகள் சிறைக்கு அனுப்பினார்கள்.
அவர்களது எண்ணங்கள் நிறைவேறாமல் போனது. என்னை இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைக்கும் எதிரிகள் எனது எதிரிகள் அல்ல. எனது கொள்கைகளை ஏற்றுக்கொண்டு என்னோடு பயனிக்கும் உங்களது எதிரிகள் என்று நினைத்துக் கொள்ளுங்கள்.
ஆலம்குளம் மக்களது வரலாறு தெரியாது. அம்மக்கள் கடந்த காலங்களில் எவ்வாறு அடிபட்டார்கள் என்று தெரியாமலும் குகனேசபுரம் கிராமம் எப்படி உருவாக்கப்பட்டது அந்த மக்களின் வரலாறு என்ன என்று எதுவுமே தெரியாமல் தேர்தல் காலங்களில் மாத்திரம் வந்து போவோருக்கு இந்த பகுதி மக்களைப்பற்றி என்ன தெரியும்.
நான் தழிழன் என்பதற்காக எனக்கும் எனது பரம்பரைக்கும்தான் வாக்குப் போடவேண்டும் என்று திரிந்தவர்களுக்கு மத்தியில் எனது வளர்ச்சி அவர்களுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. அதனால்தான் என்னை அழிக்க வேண்டும் என்று பார்க்கின்றார்கள். அவ்வாறானவர்கள் எனது எதிரி மாத்திரம் அல்ல உங்களுக்கும் எதிரிதான் என்பதை மறந்து விடாதீர்கள் என்றும் தெரிவித்தார்.
இந் நிகழ்வில் வாகரை பிரதேச சபை தவிசாளர் கண்ணப்பன் கணேசன், கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.




