சுயெஸ் கால்வாயில் சிக்கியுள்ள MV Ever Given கப்பலின் மீட்புப் பணி 6 வது நாளில் வெற்றியடைந்துள்ளது. இன்று கப்பல் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் தற்போது மிதக்க ஆரம்பித்துள்ளது.
இன்றைய மீட்பு பணியில் இரண்டு பெரிய டக்போட்களும் ஈடுபட்டன.
கப்பலின் கீழ் சிக்கியுள்ள சுமார் 27,000 கன மீட்டர் மணலை அகற்றப்பட்டு, 12 இழுவை படகுகள் மீட்பு பணியில் ஈடுபட்டன.
6நாட்கள் கப்பல் இந்த பாதையை அடைத்திருந்ததால், சுமார் 300 இற்கும் அதிகமான கப்பல்கள் தரித்து நிற்பது குறிப்பிடத்தக்கது.
கப்பல் சிக்கிக் கொண்டது எப்படி?
உலகின் மிகப் பெரிய கொள்கலன் கப்பல்களில் ஒன்றான ‘எவர் கீரின்’ கப்பல் 20 ஆயிரம் கண்டெய்னர்களைக் கொண்டு செல்லத்தக்கது.
400 மீட்டர் நீளமும் 59 மீட்டர் அகலமும் கொண்ட இந்தக் கப்பல் சீனாவிலிருந்து நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மார்ச் 23ஆம் திகதி சூயஸ் கால்வாயில் சென்று கொண்டிருந்தபோது பலத்த காற்று வீசியது. இதனால் அந்தக் கப்பல் கால்வாயின் குறுக்காகத் திரும்பி மணலில் சிக்கியது.
மத்திய தரைக் கடலையும் செங்கடலையும் இணைக்கும் வகையில் எகிப்து நாட்டில் அமைக்கப்பட்டிருக்கும் சூயஸ் கால்வாய் உலகின் மிக முக்கியமான கடல் வர்த்தகப் பாதையாக விளங்குகிறது. உலக வர்த்தகத்தின் 12 சதவீதம் இந்தக் கால்வாயின் வழியாக நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்தக் கால்வாயின் குறுக்காக ‘எவர் கிவன்’ கப்பல் தரை தட்டியதால் அந்த வழியாக பிற கப்பல்கள் செல்ல முடியாத நிலை உருவானது. கிட்டத்தட்ட கால்வாயின் இருபுறம் 300 வரையான கப்பல்கள் செல்ல வழியின்றி நின்றன. இதனால் தினமும் பல ஆயிரம் கோடி மதிப்பிலான சரக்குகள் தேக்கம் அடைந்தன.




