சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான் ஆகியோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நிலையில், தமிழக வீரர் பத்ரிநாத்துக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ரோட் சேஃப்டி சீரிஸ் டி20 கிரிக்கெட் தொடரில் சச்சின், பத்ரிநாத், யூசுப் பதான் மூவரும் ஒரே ஓய்வு அறையில் தங்கியிருந்ததால், தற்போது மூவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரோட் சேஃப்ட்டி சீரிஸ் என்று பெயர் வைத்து டி20 தொடர் நடத்திவிட்டு, வீரர்களுக்கு இப்படி சேஃப்டி இல்லாமல் போய்விட்டது.
பத்ரிநாத் தனது ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், ‘நான் அனைத்துவிதமான, அத்தியாவசியமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தேன். தொடர்ந்து பரிசோதனைகளும் செய்திருந்தேன்.
இருப்பினும், நான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். எனக்கு இலேசான அறிகுறிகள்தான் இருக்கின்றன. அனைத்து மருத்துவ வழிமுறைகளையும் பின்பற்றுவேன். வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை எடுத்து வருகிறேன்“ எனத் தெரிவித்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர், யூசுப் பதான் ஆகிய இருவருக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராய்ப்பூரில் நடந்த ரோட் சேஃப்ட் டி20 தொடரில் லீக் ஆட்டங்கள் முதல் இறுதிப் போட்டி வரை ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டனர். ரசிகர்கள் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று யாரும் வலியுறுத்தவில்லை.




