முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரன் மற்றும் பாதாள உலகத் தலைவனான தினுக மதுசங்க அல்லது கெசல்வத்த தினுக திங்கள்கிழமை (13) துபாயில் உள்ள மருத்துவமனையில் காலமானார்.
கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளான பாதாள உலகத் தலைவன் தினுக, திடீரென மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பெரிய அளவிலான ஹெரோயின் கடத்தல், கொலை மற்றும் மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல கொடூரமான குற்றங்கள் தொடர்பாக இந்த நபரை கைது செய்ய இன்டர்போல் ஊடாக சிவப்பு அறிவித்தல் விடக்கப்பட்டுள்ளது.
டுபாயில் இருந்தபடி ஹெரோயின் கடத்தலில் இவர் நீண்ட காலமாக ஈடுபட்டதாக பொலிசார் தெரிவித்தனர். மாக்கந்துரே மதுஷூடனும் இணைந்த செயற்பட்டிருந்தார்.
தொழிலதிபர் கீத்சிறி ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் கொலை உள்ளிட்ட பத்து கொலை வழக்குகளில் கெசல்வத்த தினுக மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
புறக்கோட்டை, கெசல்வத்த, கொள்ளுப்பிட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வணிகர்களிடமிருந்து தினுகவின் பாதாள உலகக்குழுவினர் மாதாந்தம் கப்பம் வசூலித்து வந்துள்ளனர்.
அவர் கெசல்வத்த பகுதியில் ஒரு பெரிய கட்டிடத்தையும் கட்டியுள்ளார். மேலும் அவர் பல வணிக வளாகங்களை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.



