சைவ அமைப்புக்களின் ஒருங்கிணைந்த கட்டமைப்பான சைவத்தமிழர் பேரவையின் திருக்கோவில் வழிகாட்டல் ஒழுங்கிற்கான பரிந்துரைகளை மேற்கொள்ள நிபுணர் குழுவை பல்வேறு சமய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கீரிமலையில் கூடி அங்குரார்ப்பணம் செய்தனர்.
ஒய்வு பெற்ற நீதிபதி முன்னாள் சைவப் பரிபாலன சபை தலைவர் சிவத்திரு.வசந்தசேனன் அவர்கள் இந்த நிபுணர் குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிவராத்திரி நன்னாளில் கீரிமலை குழந்தைவேல் சித்தர் பீடத்தில் இடம்பெற்ற நிகழ்வில்
கீரிமலை மெய்கண்டார் ஆதீனம் தவத்திரு உமாபதிசிவம் அடிகளார் திருமுன்னிலை வகித்தார்.
கோவிலைத் தழுவிய குடிகள் குடிகளைத் தழுவிய கோவில் என்ற மையக்கருவை சைவத்தமிழ் மக்களிடையே வலுப்படுத்த பல்வேறு விடயதானங்களில் இந்த நிபுணர் குழு கருத்துக்களை ஆலோசனைகளை சைவப் பெரியார்கள், தர்மகர்த்தார்கள் குருமாரிடம் கேட்டறிய இருப்பதாக நிகழ்வின் ஒருங்கினைப்பாளர்களில் ஒருவராகிய சைவ மகா சபைப் பொதுச் செயலாளர் மருத்துவர் பரா. நந்தகுமார் தெரிவித்தார்.
மெய்கண்டார் ஆதினம் தனது ஆசியுரையில் கோவில்களில் முழுமையான சமூக மைய பரிணாமத்துடன் மக்களை ஆற்றுப்படுத்தும் முன் மாதிரியான வழிபாட்டு முறைகள் பின்பற்றப்படுதல் உறுதிப்படுத்தப்பட வேண்டும் எனவும் நிதியை முன்னிலைப்படுத்தி கிரியைகள் மேற்கொள்ள கோவில் உள்ள பொறுப்பு வாய்ந்த எவரும் இடங் கொடுக்க கூடாது எனவும் குறிப்பிட்டார்.
நிபுணர் குழுவை வழிநடத்தவுள்ள முன்னாள் நீதிபதி வசந்தசேனன் பல்வேறு பெரியவர்களை இக்குழு எதிர்காலத்தில் உள்வாங்கி கோவில் தர்மகர்த்தாக்கள், குருமார்கள், தொண்டர்கள், அடியவர்களின் பங்கும் பணியும் மேம்படுவதற்கான பல வழிகாட்டல் பரிந்துரைகளை இக்குழு தயாரிக்கும் என குறிப்பிட்டார்
அறநெறிப் பாடசாலை, அறப்பணி நிதியம் , திருக்கோவிலின் ஆளுகைக்குட்பட்ட மக்களின் பிரச்சனைகளை தீர்க்கும் பொறிமுறைகள், திருக்கோவில் பொருளாதாரத்தை அனைத்து மக்களுடனும் பகிர்ந்து கொள்ளல் என பல விடயங்கள் நிகழ்வில் கலந்து கொண்ட பெரியோர்கள், துறைசார் புலமையாளர்கள், சிவதொண்டர்களால் முன்வைக்கப்பட்டது.
தற்கால நிலைமையும் ஏனைய மாவட்ட பிரதிநிதி களின் கருத்துக்களை கேட்கவும் வசதியாக தொடர் நிகழ்நிலை (Zoom) கலந்துரையாடல்களையும் முன்மொழிவு எழுத்தாவணங்களையும் அனைத்து தரப்பினரிடையே பெற்று கொள்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
கொரொனா கால சுகாதார நடைமுறைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட யாழ் மாவட்ட அன்பர்களுடன் இக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. முன்னதாக Zoom வழி இந்த அங்குரார்ப்பணம் தொடர்பாக ஏனைய மாவட்ட பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டு இருந்ததாகவும் ஏற்பாட்டnளர்களான சைவத் தமிழர் பேரவையினர் தெரிவித்தனர்.



