இலங்கை வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை, மியான்மர் சமூக ஊடகவாசிகள் கடுமையாக விமர்வித்து வருகின்றனர். அத்துடன், #ProtestSriLanka என்ற ஹாஷ்டேக் ருவிற்றரில் பிரபலமாகியுள்ளது.
மியான்மரின் இராணுவ ஆட்சியாளர்களால் நியமிக்கப்பட்ட வெளியுவிவகார அமைச்சர் வுன்னா முவாங் எல்வினை அங்கீகரித்து, வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன அண்மையில் அனுப்பிய கடிதத்தினால் இந்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.
வங்காள விரிகுடா பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு (பிம்ஸ்டெக்) மாநாடு அமைச்சர்கள் மட்டத்தல் இடம்பெறவுள்ளது மார்ச் 31 தொடக்கம் ஏப்ரல் 1ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உரையாற்ற, எல்வினுக்கு கடிதம் மூலம், அமைச்சர் குணவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.
மியான்மரில் ஜனநாயக வழியில் தெரிவுசெய்யப்பட்ட அரசை கவிழ்த்து விட்டு, இராணுவ ஆட்சியாளர்கள் சட்டவிரோதமாக பதவிவகித்து வரும் நிலையில், உலக நாடுகளே கூட்டாக மியான்மரை எதிர்த்து வருகின்றன.
இந்த நிலையில், மியான்மரின் அரசுக்கு அங்கீகாரமளிப்பதை போல இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் அழைப்பு உள்ளதை சுட்டிக்காட்டும் மியான்மர் சமூக ஊடகவாசிகள், இந்த அழைப்பை இரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி வருகிறார்கள்.
இலங்கையில் இராணுவ பாணி ஆட்சி நடப்பதால், மியான்மரை அங்கீகரித்தீர்களா என்றும் சிலர் கோபாவேசமாக கேள்வியெழுப்பியுள்ளனர்.
இதேவேளை, மியான்மரில் நடந்த இராணுவ சதிப்புரட்சியை இலங்கை ஏற்றுக் கொள்ளவில்லை என்று வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயந்த கொலம்பகே விளக்கமளித்துள்ளார். இந்த அழைப்பின் மூலம், தற்போது மியான்மரில் ஆட்சியில் இருக்கும் இராணுவத்தால் நடத்தப்படும் ஆட்சி குறித்து இலங்கை தனது கருத்தை தெரிவிக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
“ இலங்கை தற்போது பிம்ஸ்டெக்கின் தலைவராக உள்ளது. எனவே, கொழும்பில் நடைபெறவிருக்கும் நிகழ்வுகளுக்கு பிம்ஸ்டெக்கின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அமைச்சர் குணவர்த்தன அழைப்பு விடுத்துள்ளார். மியான்மர் பிம்ஸ்டெக்கிலிருந்து வெளியேற்றப்படாததால், அமைச்சர் குணவர்தன நடைமுறைகளைப் பின்பற்றி நாட்டின் தற்போதைய வெளியுறவு அமைச்சரை அழைக்க வேண்டியிருந்தது“ என தெரிவித்துள்ளார்.
சில நெட்டிசன்களின் எதிர்ப்புக்கள் கீழே-