கொல்கத்தாவில் கிழக்கு ரயில்வே அலுவலக கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகினர்.
மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் ஸ்ட்ராண்ட் சாலையில் கிழக்கு ரயில்வே அலுவலக கட்டிடடம் அமைந்துள்ளது. 13 மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தில் நேற்றிரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக இறந்தனர். இவர்களில் 4 தீயணைப்பு வீரர்களும், துணை காவல் ஆய்வாளர் ஒருவரும், ரயில்வே ஊழியர்கள் இருவரும் அடங்குவர்.
இந்த விபத்து மேற்குவங்கத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து குறித்து ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொல்கத்தா ரயில் விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். ரயில்வே ஊழியர்கள், பொது மேலாளர் சம்பவ இடத்தில் உளனர். மாநில அரசுடன் மீட்பு, நிவாரணப் பணியில் இணைந்து பணியாற்ற தயாராக இருக்கிறோம். ரயில்வே வாரியத்தின் 4 முக்கிய தலைமை அதிகாரிகள் அடங்கிய குழு சார்பில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனப் பதிவிட்டிருந்தார்.
விபத்துப் பகுதிக்குச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, இந்த விபத்து மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் ஒதுக்கப்படும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றார். விபத்துப் பகுதியை ஆய்வு செய்ய ரயில்வே அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று புகார் கூறிய மம்தா, இதனை அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறிச் சென்றார்.
ஆனால், கிழக்கு ரயில்வே பொது மேலாளர் மனோஜ் ஜோஷி பேசும்போது, “தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்துக்கு உயரதிகாரிகள் வந்துவிட்டனர். தேவையான அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருந்தனர். தீ விபத்தின் காரணமாக டிக்கெட் முன்பதிவுக்கான இயந்திரம் ஒன்று முழுமையாக சேதமடைந்தது. சிஆர்ஐஎஸ் மூலம் பேக் டேட்டாக்களை மீட்க முயற்சி நடந்து வருகிறது” எனக் கூறினார்.