27.7 C
Jaffna
September 22, 2023
இலங்கை

மூத்த பத்திரிகையாளர் ஷண் மறைவுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் கவலை!

சிரேஷ்ட பத்திரிகையாளர் எஸ். சண்முகராஜாவின் மறைவுக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ளது.

ஏறத்தாழ 55 வருடங்கள் தொடர்ச்சியாக ஊடகத்துறையில் கால்பதித்த சண்முகராஜா சிலவாரங்கள் சுகவீனமுற்றிருந்த நிலையில் தனது 85 வது வயதில் நேற்றுக்காலை யாழ்ப்பாணத்தில் காலமானார்.

1935 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும் 1955 இலிருந்து கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஷண் என்று எல்லோராலும் அழைக்கப்படும் மூத்த பத்திரிகையாளர் சண்முகராஜா கலை, இலக்கியம், சினிமாத்துறை, தமிழக அரசியல், என பல்வேறு பரிணாமங்களில் தனது ஊடகப்பணியினை ஆற்றி வந்திருந்தார்.

1940 களில் தனது ஆரம்பக்கல்வியை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியிலும் ( அன்றைய காலகட்டத்தில் சிறுவர்களும் அனுமதிக்கப்பட்டார்கள்) அதற்கடுத்து யாழ். மத்திய கல்லூரியிலும் பயின்ற ஷண் 1964 ஆம் ஆண்டு முன்னாள் தினகரன் ஆசிரியர் வி.கே. பி.நாகனை ஆசிரியராகக் கொண்டு எம்.டி. குணசேனாவின் இன்டிபென்டன் நியூஸ்பேப்பர்ஸ் லிமிடெட்டிலிருந்து வெளிவந்த ‘‘ராதா’’ சஞ்சிகை மூலம் பத்திரிகைத் துறைப் பயணத்தை ஆரம்பித்தார்.

1966 ஆம் ஆண்டு அதே பத்திரிகை ஸ்பானத்திலிருந்து இலங்கையின் தமிழ்ப் பத்திரிகையுலக ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகத்தை பிரதம ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த தினபதி, சிந்தாமணி, சூடாமணியிலும் பணியாற்றியவர். கடைசியாக வீரகேசரியிலும் பணியாற்றி ஓய்வு பெற்ற போதிலும் இறுதிக்காலம் வரை இவரது ஆக்கங்கள் சுதந்திர ஊடகவியலாளராகப் பணியாற்றுவதன் மூலம் ஷண், சஞ்(ஷண்)ஜயன், அன்டர்ஷண் என்ற புனைப்பெயர்களில் வெளிவந்துகொண்டிருந்தது. ஷண்ணின் மறைவு தமிழ் ஊடகப்பரப்பில் நிச்சயம் ஒரு இடைவெளியை விட்டுச் சென்றுள்ளதை குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது.

2008 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14 ஆம் திகதி வாழ்நாள் நீண்டகாலம் பத்திரிகைத்துறையில் சேவைக்காக இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும், இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும் இணைந்து நடத்திய ஊடகவியலாளர்களை கெளரவிக்கும் 10வது வருட விருது வழங்கும் விழாவிலும் தங்கப் பதக்கம் வழங்கி கெளரவிக்கப்பட்ட ஷண் கலாபூஷணம் அரச விருது வழங்கும் விழாவிலும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

தற்போதைய கொரோனா சூழ்நிலையால் அவரின் இறுதிக்கிரியைகளில் ஊடகவியலாளர்கள் நேரடியாக சென்று கலந்துகொள்ள முடியாத போதும் அவரின் நினைவஞ்சலி நிகழ்வை கொழும்பில் நடத்த தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் ஒழுங்குகளை செய்யவுள்ளது.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்குமாறு அனைத்து தமிழ் ஊடகவியலாளர்களையும் ,தமிழ் ஊடகவியலாளர் சங்கம் கேட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பம்பலப்பிட்டி புகையிரத நிலைய கூரை கழன்று விழுந்து 2 பேர் காயம்!

Pagetamil

நல்லூரில் திலீபன் ஆவணக்காப்பகம் திறப்பு: வரலாற்றை அறிய இளையவர்கள் முண்டியடிப்பு!

Pagetamil

பாணுக்குள் பீடித் துண்டு!

Pagetamil

யாழில் 33 வருடங்களின் பின் ஆலயத்தில் வழிபட அனுமதித்த இராணுவம்!

Pagetamil

பேராதனை பல்கலை மருத்துவபீடத்தில் பயின்ற மன்னார் மாணவன் திடீர் மரணம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!