கந்தளாயில் பெண்ணொருவர் கணவரால் வீதியில் கூரிய ஆயுதத்தால் குத்தப்பட்ட போது, சம்பவ இடத்திற்கு வந்து திரும்பிச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடமை தவறிய குற்றச்சாட்டில் அவர் மீது துறை ரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் கந்தளாய் பகுதியில், தாதியாக கடமையாற்றும் தனது மனைவியை, சிவில் பாதுகாப்பு படைவீரர் ஒருவர் நடுவீதியில் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தினார்.
மனைவி மீது 35 முறை அவர் கத்திக்குத்து நடத்தினார்.
அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.
நடுவீதியில் கத்திக்குத்து தாக்குதல் நடந்த போது அந்த வீதியினால் வந்த கந்தளாய் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், சம்பவத்தை கண்டதும், வந்த வழியே திரும்பி சென்றிருந்தார்.
அங்கிருந்த சிசிரிவி கமராவில் இந்த காட்சி பதிவாகியிருந்தது.
இதனடிப்படையில், கடமை தவறிய குற்றச்சாட்டில் அவர் மீது நடவடிக்கையெடுக்கப்பட்டுள்ளது.



