கறுப்பினத்தவர் என்பதால் அவர்கள் குற்றவாளிகளாக இருப்பார்கள் என்பது தனக்கு தெரியுமென கூறி, இரண்டு ஆண்களை கைது செய்த பிரித்தானியாவின் இளம் பெண் பொலிஸ் அதிகாரி தனது வேலையை இழக்க நேரிடுகிறது.
ஆண்ட்ரா செர்பனெஸ்கு என்ற யுவதியே இப்படி அலப்பறை செய்தவர்.
ஆசிய பிராந்தியத்தை சேர்ந்த ஒருவரை, ‘வெடிகுண்டு வைத்திருக்கும் நபரைப் போல தோற்றமளித்தார்’ என்று குற்றம் சாட்டி கைது செய்துள்ளார்.
அவரது கருத்துக்கள் இனவெறி மற்றும் தாக்குதல் எனக் கருதப்படலாம், மேலும் இது தவறான நடத்தைக்குரியது என்று அவான் மற்றும் சோமர்செட் பொலிஸ் கூறுகிறது.
2020 மார்ச்சில் பொலிஸ் சேவையில் இணைந்த கான்ஸ்டபிள் செர்பானெஸ்கு, கடந்த ஜூலை மாதம் ஒரு பெட்ரோல் நிலையத்தில் போதைப்பொருள் விநியோகம் மற்றும் பண மோசடி ஆகியவற்றில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவரை தடுத்து வைத்தார்.
அவர்களை பார்த்தவுடன் அவர்கள் குற்றவாளிகள் என தெரிந்ததாக தனது சக ஊழியரிடம் அவர் குறிப்பிட்டிருந்தார்.
அவர்கள் கறுப்பர்கள் என்பதால் இருவருமே குற்றத்தில் ஈடுபட்டதை அறிந்திருப்பதாக அவர் வாதிட்டார்.
அந்த மாதத்தின் பிற்பகுதியில், அதிகாலை 4.15 மணிக்கு மசூதிக்கு வெளியில் காத்திருந்த ஒரு ஆசிய முஸ்லிம் நபரை விசாரித்துள்ளார். மசூதி திறப்பதற்காக காத்திருப்பதாக அந்த நபர் குறிப்பிட்டுள்ளார்.
அந்த நபரை பார்க்கும் போது, ‘வெடிகுண்டு வைத்திருக்கும் வகை’யை சேர்ந்தவர் போல தெரிவதாக அவர் கூறியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அவர் மீதான விசாரணை இன்றும் நடைபெற்றது.