முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தொலைக் காணொளி ஊடாக மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். எனினும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஏற்பாட்டு குழு அப்படியொரு தீர்மானம் எடுக்கப்படவில்லையென அறிவித்துள்ளது.
சுகாதார நடைமுறையை பேணி முள்ளிவாய்க்காலில் அஞ்சலி செலுத்தலாம் என்ற முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற தீர்ப்பு வெளியாவதற்கு முன்னதாக இந்த இரண்டு சம்பவங்களும் நடந்தன.
கொவிட் 19 நிலைமை காரணமாக மக்கள் ஒன்றுகூடுவது சுகாதார விதிமுறைக்கு புறம்பானது என்பதால், தொலைக்காணொளி ஊடாக நாளை மாலை அஞ்சலி நிகழ்வை மேற்கொள்வதாக எம்.ஏ.சுமந்திரன் காணொளியொன்றில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில், நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவிடம் தமிழ்பக்கம் வினவியபோது, இந்த அறிவிப்பிற்கும் தமக்கும் தொடர்பில்லையென்றனர்.
அஞ்சலி நிகழ்வு மாற்று ஒழுங்கில் இடம்பெறும் என்றும், இன்று மாலை அது பற்றிய அறிவித்தலை விடுக்கும் வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தனர்.




