இந்தியாவில் முதன்முறையாக ஹைதரா பாத் தேசிய மிருககாட்சி சாலையில் 8 சிங்கங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப் பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள நேரு தேசிய மிருக காட்சி சாலையில் 12 சிங்கங்கள் உள்ளன. தற்போது ஹைதராபாத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதால் கடந்த 2ஆம் திகதி மிருககாட்சி சாலை மூடப்பட்டது. இங்கு 40 ஏக்கரில் சஃபாரி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உள்ள சிங்கங்கள் கடந்த 4 நாட்களாக சரிவர உணவு உண்ணாமலும் மூக்கில் நீர் கசிந்த படியும் லேசான இருமலுடனும் காணப்பட்டன.
இதனால் இவற்றுக்கு கொரோனா இருக்குமோ என்ற சந்தேகம் மிருககாட்சி சாலை நிர்வாகிகளுக்கு ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா அறிகுறிகள் இருந்த 4 ஆண் சிங்கங்கள் மற்றும் 4 பெண் சிங்கங்களிடம் மாதிரி எடுக்கப்பட்டு, மூலக்கூறு உயிரியல் மையத்தில் (சிசிஎம்பி) பரிசோதனை செய்யப் பட்டது. இதில் 8 சிங்கங்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த 8 சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டன.
சிங்கங்களின் எச்சில் மாதிரிகளை பரிசோதனை செய்த சிஎஸ்ஐஆர் அமைப்பின் ஆலோசகர் ராகேஷ் மிஸ்ரா கூறும் போது, “சிங்கங்கள் நெருக்கமாக வாழ்ந்திருப்பதால் தொற்று ஏற்பட்டிருக்கும். சிங்கங்களின் மலத்தையும் எடுத்துப் பரிசோதிக்க முடிவு செய்துள்ளோம். இந்த 8 சிங்கங்களின் உடலில் இருந்த வைரஸ்களும் உருமாறிய கொரோனா வைரஸ்கள் அல்ல. சிங்கங்களுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. சிங்கங்கள் நன்றாகச் சாப்பிடுகின்றன. நலமாக இருக்கின்றன” என்றார்.
மனிதர்களிடமிருந்து சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பரவி யிருக்கலாம் என கருதப்படுகிறது. இந்தியாவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது இதுவே முதன்முறை யாகும்.
இதற்கு முன், கடந்த ஆண்டு ஏப்ரலில் நியூயோர்க்கில் உள்ள ஒரு மிருககாட்சி சாலையில் 8 புலி மற்றும் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.




