2019 இல் புதிய அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்ட வரி திருத்தங்கள் காரணமாக நாட்டிற்கு சுமார் 500 பில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக கூறுவது நியாயமற்றது என நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் சஜித் ஆட்டிகல தெரிவித்துள்ளார்.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு வாகன இறக்குமதி இடைநிறுத்தம் உட்பட இறக்குமதி மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மற்றும் கோவிட்-19 தொற்றுநோயால் ஏற்பட்ட சுருக்கமே காரணம் என ஆட்டிகல கூறினார்.
பொது நிதி தொடர்பான குழுக் கூட்டத்தில் முன்னாள் நிதிச் செயலாளர் இதனைத் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால், நாணயச் சபையின் முன்னாள் உறுப்பினர்கள், தற்போதைய மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். .
பொறுப்புள்ள அரச அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகள் எடுக்கும் சில முடிவுகள் எப்போதும் சரியாக இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசியல்வாதிகள் எடுக்கும் தவறான தீர்மானங்களைச் சுட்டிக்காட்டுவது அத்தகைய அதிகாரிகளின் பொறுப்பும் கடமையும் என்றும், அத்தகைய முடிவுகளின் விளைவுகளுக்கு அரசியல்வாதிகள் மட்டும் பொறுப்பேற்கக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இரண்டு வருடங்களாக நாட்டின் பொருளாதாரம் சரியான பாதையில் செல்லவில்லை எனவும், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையும் வரை தமக்கு அது தொடர்பில் தெரியாது எனவும் ஆளுநர் வீரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.
அரசியல் அதிகாரிகளின் முடிவுகளின் அடிப்படையில் மட்டுமே அரச கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இந்தக் கொள்கைகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அரசியல் அதிகாரிகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் எச்சரித்த போதிலும் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குழுவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர்.




