ஓய்வூதிய பணத்தை பெற சென்ற முதியவர் ஒருவர், வங்கியிலேயே உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் நகரிலுள்ள தேசிய சேமிப்பு வங்கியில் இன்று (15) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தெல்லிப்பளை கொல்லன்கலட்டி பகுதியைச் சேர்ந்து சுப்பிரமணியம் காசிநாதர் (81) என்ற முதியவர், தனது ஓய்வூதிய பணத்தை பெற்றுக்கொள்வதற்காக சுன்னாகம் நகர் பகுதியில் அமைந்துள்ள இலங்கை தேசிய சேமிப்பு வங்கிக்கு சென்றுள்ளார்.
வங்கிக்குள் சென்று, பணத்தை பெற்றுக்கொள்வதற்கான பற்றுச் சிட்டை நிரப்பி வங்கி உத்தியோகத்தரிடம் கொடுத்து விட்டு, வாடிக்கையாளர் காத்திருக்கும் பகுதியில் ஆசனம் ஒன்றில் அமர்ந்திருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த முதியவருக்கான ஓய்வூதிய பணத்தை வழங்குவதற்காக அவரது பெயரை வங்கி உத்தியோகத்தர் பலதடவைகள் அழைத்தபோதும் பதிலிருக்கவில்லை.
இதையடுத்து, சந்தேகம் கொண்ட வங்கி ஊழியர்கள் குறித்த முதியவருக்கு அருகில் சென்று, அவரை அழைத்துள்ளனர்.
ஆனால் முதியவர் எதுவித அசைவுகளும் இன்றி கதிரையில் இருந்து சரிந்து வீழ்ந்துள்ளார்.

இதையடுத்து குறித்த முதியவர் இறந்துள்ளார் என்பதை ஊகித்த வங்கி அதிகாரிகள் பொலிசாருக்கு தகவலை தெரியப்படுத்தியிருந்ததுடன் வங்கியின் செயற்பாடுகளையும் தற்காலிகமாக இடைநிறுத்தினர்.



