மியான்மரில் இராணுவ சதித்திட்டத்தை எதிர்த்து ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்ததற்காக 125,000 க்கும் மேற்பட்ட பாடசாலை ஆசிரியர்கள் இராணுவ அதிகாரிகளால் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் ஆசிரியர் கூட்டமைப்பின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த பெப்ரவரி மாதத்தில் மியான்மரின் இராணுவச்சதி நடந்தது. மியான்மரின் ஒரு தசாப்தகால ஜனநாயக சீர்திருத்தங்களை சீர்குலைத்த இந்த சதித் திட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டங்களின் ஒரு பகுதியாக, ஆசிரியர்களும் பெற்றோர்களும் கல்வி செயற்பாட்டை புறக்கணித்தனர்.
புதிய கல்வி ஆண்டு தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பாக இந்த இடைநீக்கங்கள் அறிவிப்பு வந்துள்ளது.
சனிக்கிழமை நிலவரப்படி மொத்தம் 125,900 ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பழிவாங்கல் இடம்பெறலாமென்ற அச்சத்தில் தனது பெயரை வழங்க மறுத்த ஆசிரியர் கூட்டமைப்பின் அதிகாரி இதனை தெரிவித்துள்ளார். அந்த நபர் ஏற்கனவேஇராணுவ ஆட்சியாளர்களின் கண்காணிப்பில் உள்ளார்.
இரண்டு வருடங்களின் முன்னைய கணிப்பின்படி, மியான்மரில் 430,000 பாடசாலை ஆசிரியர்கள் கடமையிலுள்ளனர.
மியன்மார் அரசு இயங்கும் குளோபல் நியூ லைட் செய்தித்தாளில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு திரும்புமாறு அழைப்பு விடுத்துள்ளது.
ஆட்சி கவிழ்ப்பு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டதன் பின்னர் சுகாதாரத் துறையிலும், அரசு மற்றும் தனியார் வணிகத்திலும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சுமார் 19,500 பல்கலைக்கழக ஊழியர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் குழு தெரிவித்துள்ளது.
பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டிலேயே வைத்திருக்கிறார்கள். ஜூன் மாதத்தில் தொடங்கும் பாடசாலை தவணை காலத்திற்கான பதிவுகள் அடுத்த வாரம் தொடங்குகின்றன, ஆனால் சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பாடசாலையிலிருந்து வெளியேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்கள்.



